உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய்த்தொற்று வயதில் மூத்தவர்களையும் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் அப்படிப்பட்டவர்கள் முடிந்த அளவுக்கு எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். நம்ம அண்ணாத்தையும் அப்படித்தான் என்கிறது கோலிவுட்.
குறுகிய காலத்திலேயே 'அண்ணாத்த' படத்தை முடித்துவிடவேண்டும் என்ற முடிவில்தான் படத்தில் நடிக்க முன் வந்தார் ரஜினி. இடையில் கொரோனாவால் ஐந்து மாதங்களாக படப்பிடிப்பு இல்லாமல் போனது.
ரஜினியும் பண்ணை வீட்டிலேயே முடங்கினார். பேரனைப் பார்ப்பதற்குக்கூட ஒரே ஒரு முறைதான் வெளியே வந்தார். அதற்கே அவர் 'இ-பாஸ்' எடுத்தாரா இல்லையா என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.
தற்பொழுது அரசு கட்டுப்பாடுகளில் நிறைய தளர்வுகள் வந்திருக்கின்றன. படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததால் 'அண்ணாத்த' படத்தை தயாரிக்கும் 'சன் பிக்சர்ஸ்', ரஜினியிடம் படப்பிடிப்புத் தொடங்கலாமா? என்று கேட்டது. அவரும் அதுக்கு சரி என்று சொல்லியதால் ஹைதராபாத் 'ராமோஜீராவ் பிலிம் சிட்டி'யில் பிரம்மாண்டமான அரங்கம் போடப்பட்டது.
திடீரென்று அரங்கம் அமைத்தவர்களில் மூவருக்கு கொரோனா என்று தெரியவர மொத்த படப்பிடிப்புக் குழுவும் ஆடிப்போயிருக்கிறது. கிருமி நாசினி தெளித்து ஆமை வேகத்தில் வேலைகள் நடந்திருக்கின்றன.
ஒரு வழியாக அரங்கு வேலையெல்லாம் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்த அன்றைக்கு படக்குழு தயாராக இருக்க, ரஜினி மட்டும் வரவில்லை.
அதிர்ந்துபோன படக்குழுவினர் விசாரித்ததில் 'படப்பிடிப்பில் கலந்துகொள்ள 100 பேருக்குத்தான் அனுமதி இருக்கிறது. ஆனால், எடுக்க இருந்த காட்சியில் 300 பேர் நடித்தால்தான் நன்றாக இருக்கும். அதற்காக 300 பேரை நடிக்க வைத்தால் அது பிரச்சினையாகிவிடும் என்று 'சன் பிக்சர்ஸ்' யோசித்திருக்க, அந்த 100 பேருக்கே பயந்திருக்கிறார் ரஜினி. இத்தனை பேர் இருக்கும் கூட்டத்தில் நடிக்கப்போய் ஏதாவது ஆகிவிடுமோ என்று யோசித்திருக்கிறார் ரஜினி.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் எஸ்.பி.பிக்கு கொரோனா வந்து இறந்தார் என்று நெருக்கமானவர்கள் சொல்ல, "படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது," என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம் ரஜினி.
இப்போது இல்லையென்றால் பிறகு எப்போது? என்று படக்குழு விசாரிக்க, வந்த பதிலைக் கேட்டு தலைசுற்றிப் போனார்களாம். பிப்ரவரி மாதம்தான் படப்பிடிப்புக்கும் அரசியலுக்கும் சரியாக இருக்கும் என்று ரஜினி முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.
'அண்ணாத்த' படத்தை முடித்துவிட்டு விரைவில் அரசியல் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கமல் படத்தையே மறுத்தார். ஆனாலும் மிரட்டும் கொரோனாவுக்கு யார்தான் மிரளாமல் இருக்கிறார்கள்? இதில், ரஜினி
மட்டும் விதிலக்கா என்ன? என்கிறது கோலிவுட்.

