‘பிகில்’ படத்தை அடுத்து தமிழில் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார் அம்ரிதா.
‘பிகில்’ படத்தில் கால்பந்து அணியின் தலைவியாக நடித்த இவர், நிஜத்திலும் விளையாட்டு வீராங்கனைதான். கூடைப்பந்து விளையாட்டில் கெட்டிக்காரர்.
ஏற்கெனவே சில தமிழ்ப் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி உள்ளார் அம்ரிதா. ‘படைவீரன்’தான் இவரது முதல் படம். அதன்பிறகு ‘காளி’யிலும் நடித்துள்ளார்.
“எனினும் ‘பிகில்’ படத்தில் ஏற்று நடித்த ‘தென்றல்’ கதாபாத்திரம்தான் என்னை தமிழ் ரசிகர்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.
“அதன்பிறகு எல்லோரும் என்னை ‘தென்றல்’ என்றே குறிப்பிடுகிறார்கள். எங்கு சென்றாலும் அந்தப் பேரை உரக்கச் சொல்லி ரசிகர்கள் கையசைக்கும்போது உற்சாகமாக உணர்கிறேன்,” என்று சொல்லும் அம்ரிதா, வித்தியாசமான கதைக்களம் என்பதால் ‘லிஃப்ட்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் ‘பிக்பாஸ்’ கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
“படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி மறைமுகமாக உணர்த்துவதைப் போல் நானும் கவினும் ‘லிஃப்ட்’ ஒன்றில் மாட்டிக் கொள்கிறோம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
“அதுமட்டுமல்ல, மொத்த கதையும் ஒரு நாளின் பகல் பொழுதில் மட்டுமே நடப்பதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர்.
“கவின் பழகுவதற்கு இனிமையானவர். ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிப்பது என்று இருவரும் கலந்து ஆலோசித்து திட்டமிட்டு நடித்தோம். படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்,” என்று சொல்லும் அம்ரிதாவுக்கு இந்தப் படம் தொடர்பில் சில வருத்தங்களும் உள்ளன.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதா என்பதே தெரியாத நிலையில் பின்னணி குரல் பதிவுக்கு இவரை அழைக்கவே இல்லையாம். பட வேலைகள் எந்த அளவில் உள்ளன என்ற விவரத்தையும் தெரிவிக்கவில்லையாம்.
“படம் என்னவாயிற்று என்று பலரும் என்னிடம் விசாரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் எனக்கு எந்த விவரமும் தெரியாது. படக்குழுவைச் சேர்ந்த எவரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் அண்மையில் பின்னணிக் குரல் பதிவையும் செய்து முடித்துள்ளனர்.
“நான் ஒரு தமிழ்ப் பெண். நன்றாக சரளமாக தமிழ் பேசுவேன். எனது கதாபாத்திரத்துக்கு நானே பின்னணிக் குரல் கொடுக்கவேண்டும் என ஆவலுடன் காத்திருந்தேன்.
“ஆனால், வேறு யாரையோ வைத்து அந்த வேலையை முடித்துள்ளனர். இதுகுறித்து எனக்கு தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ஒரு படத்துக்காக முழுமையாக, கடுமையாக உழைக்கிறோம். பதிலுக்கு நமக்குரிய மரியாதையை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அம்ரிதா.
இவரது சிரிப்பு அழகாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர். அதிலும் தெற்றுப்பல் தெரிய சிரிக்கும்போது கூடுதல் அழகைக் காணமுடிகிறது என்றும் சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்தத் தெற்றுப்பல்லைச் சீரமைக்கலாமா என தனது ரசிகர்கள் மத்தியில் சிறு கருத்துக்கணிப்பையே நடத்தி முடித்துள்ளார் அம்ரிதா. பெரும்பாலானோர் அதை அப்படியே விட்டுவிடுமாறு அறிவுறுத்தி உள்ளனராம். அதனால் எதுவும் செய்யவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
“நான் பெங்களூருவில்தான் படித்து முடித்தேன். கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். படிப்பை முடித்தபிறகு பெரிய நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தாலும் மாடலிங் மீதும் என பார்வை பதிந்திருந்தது. சில குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்திருக்கிறேன்.
“அதனால் சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இப்படியொரு சூழலில்தான் ‘படைவீரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனால் வேலையை உதறிவிட்டு மொத்தமாக சினிமா பக்கம் வந்துவிட்டேன். நான் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன,” என்கிறார் அம்ரிதா.