ஒரே சமயத்தில் பல படங்களில் நடிப்பதில் தமக்கு விருப்பமில்லை என்கிறார் அக்ஷரா.
தமிழில் இவர் நடித்துள்ள படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனினும் கமல்ஹாசனின் மகள் என்பதைத் தமது பலமாகக் கருதாமல் பிடித்தமான கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அக்ஷரா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’. ராஜா ராமமூர்த்தி இயக்கும் படம் இது. அவர் சொன்ன கதை மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டது என்றும் அதனால்தான் அதிக நாட்கள் கால்ஷீட் தந்து நடித்ததாகவும் சொல்கிறார் அக்ஷரா.
“இதுபோன்ற ஒரு திரைப்படம் தமிழில் இதுவரை வந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு ஏன் இந்திய அளவில் இப்படி ஒரு படம் வரவில்லை என்பேன். ராஜா ராமமூர்த்தி கதை சொன்ன விதம் மட்டுமல்ல, கதையும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
“என்னால் நூறு விழுக்காடு உழைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே ஒரு படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வேன். இந்தப் படத்துக்கும் அப்படித்தான் முடிவெடுத்தேன்,” என்கிறார் அக்ஷரா.
இதில் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் ஒரு நடிகையை, அவரது திறமையை ரசிகர்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்கும் என்கிறார்.
“பவித்ரா என்ற கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகச் செதுக்கியுள்ளார் ராஜா ராமமூர்த்தி. சராசரி ரசிகையாகத்தான் அவர் சொன்ன கதையைக் கேட்டேன். அவர் விவரித்த ஒவ்வொரு காட்சியும் பவித்ரா என்ற கதாபாத்திரமும் என்னை அணு அணுவாக ரசிக்க வைத்தது. என்னைப் போலவே ரசிகர்களும் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
“மிகச் சிறந்த படக்குழுவில் பணியாற்றிய திருப்தி கிடைத்தது. படக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு தனிநபரும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாகத் தந்துள்ளனர்,” என்று சொல்லும் அக்ஷராவுக்கு இயக்குநராக வேண்டும் என்பது தான் நீண்டநாள் கனவு. அதற்காகத் தன்னை ஒவ்வொரு கட்டமாகத் தயார்ப்படுத்தி வருகிறாராம்.
“திரைப்படம் இயக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். எனது இந்த விருப்பம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. சூழ்நிலை சரியாக அமைந்தால் 2022ஆம் ஆண்டு என்னை இயக்குநராகச் சந்திக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் அக்ஷரா ஹாசன்.
‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் பிரபல பின்னணிப் பாடகி உஷா உதுப் இவரது பாட்டியாக நடிக்கிறார். கதைப்படி இதில் அக்ஷராவுக்குப் பாடகி வேடம் என்று தகவல். மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், கலைராணி, ஷாலினி விஜயகுமார், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.