இப்போதைய 2020ஆம் ஆண்டு எதிர்பாராதவைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துவிட்டது என்கிறார் நடிகை ஆன்ட்ரியா.
கொரோனா கிருமித்தொற்று போன்ற எதிர்பாராத விஷயம் ஒட்டுமொத்த உலகத்தையும் மாற்றி அமைத்துள்ளது என்பதோடு தமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்.
இந்த ஊரடங்கு வேளையில் பொழுதைப் பயனுள்ள வகையில் செலவிடுபவர்களில் இவருக்கும் முதன்மையான இடத்தைக் கொடுக்கலாம். வீட்டில் இருந்தபடியே அடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கான நடிப்பு, நடனப் பயிற்சியை மேற்கொள்வது, தமக்குப் பிடித்தமான இசைத்துறை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவது, சமையல் செய்வது என்று பல வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார் ஆன்ட்ரியா.
நாள் முழுவதும் ஏதேனும் ஒரு வேலையைக் கவனிப்பதால் ஊரடங்கு, கொரோனாவால் இவரை அசைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அண்மைய சில தினங்களாக தாம் தினந்தோறும் சமைக்கும் வித்தியாசமான உணவுவகைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதைக் கவனிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இவரைப் பின்தொடர்கிறது. தற்போது தன் வீட்டு மொட்டை மாடியில் காய்கறிகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளார் ஆன்ட்ரியா.
“இந்த ஆண்டு நான் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆண்டின் துவக்கத்தில் நீ சமைக்கப்போகிறாய், காய்கறி பயிரிடப்போகிறாய் என்று யாரேனும் என்னிடம் சொல்லியிருந்தால் பதிலுக்கு அவர்களைப் பார்த்து சிரித்து, இந்தாண்டின் சிறந்த நகைச்சுவை என்று முகத்துக்கு நேராகச் சொல்லி கேலி செய்திருப்பேன்.
“காரணம், சமையலறைப் பக்கம் நான் அதிகம் போனதில்லை. ஆனால், இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதோ தினமும் ஏதாவது ஒரு உணவைச் சமைக்கிறேன். அதுகுறித்து எனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறேன்.
“என் வீட்டு மொட்டை மாடி எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றாகிவிட்டது. அங்கு காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றை அன்றாட உணவுக்குப் பயன்படுத்துவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை.
“இந்த உலகமும் வாழ்க்கையும் நம்மை அடுத்தடுத்து எங்கு அழைத்துச் செல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எனவே, திறந்த மனதுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். அன்றாடம் ஓர் அதிசயம் நிகழக்கூடும்,” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் ஆன்ட்ரியா.
தற்போது படப்பிடிப்புகளில் பங்கேற்கத் தயாராகி வரும் இவர், தமது அண்மைய புகைப்படத் தொகுப்பையும் வெளியிட உள்ளார். ஆன்ட்ரியா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘மாஸ்டர்’.
இவரைப் போலவே எதிர்பாராத சில சம்பவங்கள் தம்மை உற்சாகப்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார் பூஜா ஹெக்டே.
தற்போது இவர் படப்பிடிப்புக்காக இத்தாலியில் முகாமிட்டுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ‘ராதேஷ்யாம்’ படத்தில் இவர்தான் நாயகன் பிரபாஸுக்கு ஜோடி.
இந்நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி இவரது பிறந்தநாள் என்பது படக்குழுவினருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அழகான கேக் ஒன்றைத் தயார் செய்து அனைவரும் கூடி வாழ்த்துச் சொல்லி அதை வெட்ட வைத்துள்ளனர். படக்குழுவின் அன்பு திக்குமுக்காடச் செய்தது என்றால், இத்தாலியில் உள்ள ரசிகர்கள் தேடி வந்து வாழ்த்தியது மேலும் நெகிழ வைத்ததாகச் சொல்கிறார் பூஜா.
இவர் தங்கியிருந்த தங்கு விடுதிக்கு வெளியே திடீரென சில ரசிகர்கள் கூடிவிட்டனராம். அவர்கள் கையில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள் பூஜா’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகை ஒன்றையும் ஏந்தி இருந்தனராம்.
“ரசிகர்கள் கூடி என்னை வாழ்த்தி உரக்க சத்தமிட்டது வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. எனக்காக சில மணி நேரங்கள் காத்திருந்து சந்தித்ததுடன் பரிசுகளும் அளித்தனர். அவர்களுடன் பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
“வழக்கமான பிடித்தமான வேலை, மகிழ்ச்சி, அன்பு, சிரிப்பு, வாழ்த்துகள் என எல்லாம் நிறைந்த இந்தப் பிறந்தநாள் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒன்று,” என்று இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
இதற்கிடையே சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பூஜாவுக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழில் புதுப் படம் ஒன்றில் இவர் ஒப்பந்தமாகி உள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. எனினும் அத்தகவல் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளார் பூஜா.