இந்தி நடிகர் சஞ்சய் தத், ஊடக ஊகங்களை உறுதிப்படுத்தும் விதமாக தமக்கு புற்று நோய் இருப்பதாக அறிவித்திருக்கிறார்.“இது என் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஆக அண்மை வடு. ஆயினும் அதனை முறியடிப்பேன். இந்த புற்று நோயிலிருந்து வெளிவருவேன்,” என்று 61 வயது தத், தமது இடது புருவத்தின் மீதுள்ள வடுவைச் சுட்டி இவ்வாறு கூறினார்.
திரு தத்தின் அறிவிப்பைக் காட்டும் காணொளி, பிரபல பாலிவுட் சிகை அலங்கார கலைஞர் ஆலிம் அக்கிமின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இருந்தபோதும் ‘கே.ஜி.எப்: சேப்டர் 2’ (K.G.F: Chapter 2) என்ற தமது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் தொடரும் என்று திரு தத் கூறினார்.
மருத்துவ சிகிச்சையின் காரணமாக பணியிலிருந்து தாம் விடுப்பு எடுப்பதாக திரு தத் இரு மாதங்களுக்கு முன்னர் தமது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்தார். அப்போது அவர் அந்த மருத்துவ சிகிச்சை என்ன என்பதை விவரிக்கவில்லை.
1980களில் பிரபலம் அடையத் தொடங்கிய சஞ்சய் தத், பின்னர் புற்றுநோயால் இறந்த தாயாரை இழந்த சோகத்தில் போதைப் புழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.