கோடம்பாக்கத்தில் மேலும் ஒரு கதைத் திருட்டு விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இம்முறை பிரச்சினையில் சிக்கியிருக்கும் படம் ஜெயம் ரவி நடித்துள்ள 'பூமி'.
லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இப்படம் தன்னுடைய 'துருவன்' கதைதான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் கார்த்திக் கே.பாலாஜி. இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
தென்னிந்திய எழுத்தாளர் சங்கமும் கார்த்திக்கின் புகாரைப் பெற்று, சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறது. 'பூமி'யின் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரிடமும் விளக்கம் கேட்டிருக்கிறது. முதற்கட்டமாக கதைச்சுருக்கத்தை தருமாறு கூறியுள்ளனராம்.
கார்த்திக் பாலாஜி தரப்பு அதை உடனடியாக கொடுத்துவிட்ட நிலையில், லக்ஷ்மன் தரப்பு கதைச்சுருக்கம் இல்லை என்றும், வாய்மொழியாக கதையை விவரிக்க தயார் என்றும் கூறியுள்ளதாம். இதைக் கேட்டு எழுத்தாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்.
லக்ஷ்மனின் முந்தைய 'போகன்' படமும் கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கி, நீதிமன்றம் வரை சென்றதை கோடம்பாக்க விவரப்புள்ளிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் 'பூமி'யை நேரடியாக இணையத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். இதனால் கார்த்திக் பாலாஜி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
திருச்சியைச் சேர்ந்த இவர், செல்வா உட்பட சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 'வேட்டை', 'நிஜம்', 'மறுபடியும்' என பல குறும்படங்களை இயக்கி பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். இது தவிர ஆவணப்படங்களும் இயக்கியிருக்கிறார்.
தற்போது சொந்த நிறுவனம் மூலம் விளம்பரப் படங்களை இயக்கி வருபவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பே 'துருவன்' கதையை எழுதிவிட்டாராம். பின்னர் அக்கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.
"முதலில் விஷாலை வைத்துதான் தனது படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் கார்த்திக் பாலாஜி. அவரது மேலாளரைச் சந்தித்து கதையும் சொன்னார். ஆனால், திடீரென விஷாலிடமிருந்து முருகராஜ் விலகவே அந்த முயற்சி கைகூடவில்லை.
"அடுத்து சூர்யாவின் சகோதரர் கார்த்தியை அணுகினார். கார்த்தி தரப்பு கதை நன்றாக இருப்பதாகப் பாராட்டினாலும் ஏற்கெனவே படம் இயக்கியவருக்கு வாய்ப்பளிப்பதுதான் கார்த்தியின் கொள்கை என்று கூறிவிட்டதாம். இதன்பிறகே ஜெயம் ரவியின் பக்கம் கார்த்திக்கின் பார்வை திரும்பியுள்ளது.
"ஜெயம் ரவியைச் சந்திக்க முற்பட்டபோது அவருக்காக ஆனந்த் ஜாய் என்பவர்தான் கதை கேட்பார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆனந்த் ஜாயைச் சந்தித்திருக்கிறார் கார்த்திக்.
"கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதமே கார்த்திக் 'துருவன்' கதையை ஆனந்திடம் விவரிக்க இப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் எதிர்பார்த்தோம். அண்ணனிடம் விவரம் தெரிவிக்கிறேன்," என்று கூற, கார்த்திக் மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால், 'அடங்கமறு' படம் வெளியீடு கண்டபின் 2019ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஆனந்த் ஜாயின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாம் கார்த்திக் பாலாஜியுடன் பேசுவதையும் அவரைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்தாராம்.
இந்நிலையில் 'பூமி' படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் கார்த்திக் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. தனது கதையின் சாயலுடன் ஒரு படம் தயாராவது அவரை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து எப்படியோ ஆனந்த் ஜாயை சந்தித்தபோது சிரித்து மழுப்பினாராம்.
"என்னுடைய கதையில்தான் சிறு மாற்றங்களைச் செய்து 'பூமி' படத்தை உருவாக்குகிறார்கள் என்பது உறுதியானது. இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரிடம் பேசமுடியவில்லை. தவிர ஆனந்த் ஜாயிடம்தான் நான் முழுக் கதையையும் சொல்லியிருந்தேன். எனவே இந்தக் கதைத் திருட்டில் ஜெயம் ரவிக்கோ, தயாரிப்பாளருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என நம்புகிறேன். ஆனந்த் ஜாய்தான் கதைத்திருட்டின் பின்னணியில் உள்ளார். எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் சார் எனக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் கார்த்திக் கே. பாலாஜி.

