நடிகை நயன்தாரா, திகில் நிறைந்த மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்தப் படத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் இணைந்து நடித்த நடிகருடன் மீண்டும் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
கடந்த 14 ஆண்டுகளாக தென்னிந்திய ரசிகர்களைத் தன் அழகு, கவர்ச்சி மற்றும் நடிப்பின் மூலம் கட்டி வைத்திருக்கிறார் நயன்தாரா. அழகாக இருக்கும் நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள். கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள். நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களைக் கடந்து வந்தாலும் இந்த மூன்றிலுமே உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்.
இவர் மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும் தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும்போது மலையாளத்திலும் நடிக்கும் நயன்தாரா, கடந்தாண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’ திரைப்
படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மலையாளத்தில் உருவாகும் ‘நிழல்’ என்ற திகில் நிறைந்த பேய்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் நாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘டுவென்டி 20’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு முழு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
‘இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் நயன்தாரா பொருத்தமாக இருப்பார்,’ என்று தான் பரிந்துரைத்ததாக குஞ்சாக்கோ போபன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்கும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து மோகன்லால், டோவினோ தாமஸ் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாராவும் தன்னுடைய சம்பளத்தை வெகுவாகக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கிற்கு முன்பு நயன்தாரா ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தில் நயன்தாரா வழக்கறிஞராக நடிக்கிறார்.
மேலும் ஆர். ஜே. பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அந்த படம் இணையத்தில் வெளியாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து திரையரங்கில்தான் வெளியாகும் என்று மறுப்பும் வெளியாகியது. குழப்பத்திலேயே இருக்கிறது இந்தப் படம்.
இதற்கிடையில் தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா. விரைவில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.