நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் கதாநாயகியாக அதிதிராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் கலந்து கொண்டார் அதிதி. தற்போது ஊரடங்கு தளர்வால் ‘துக்ளக் தர்பார்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் இருந்து அதிதிராவ் திடீரென்று விலகி விட்டார். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட படப்பிடிப்பு குளறுபடிகளால் மற்றொரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும் அதனால்தான் விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தெலுங்கில் சித்தார்த், சர்வானந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘மஹா சமுத்திரம்’ படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஹைதரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் அஜய் பூபதி இயக்கவுள்ள இந்தப் படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.
‘மஹா சமுத்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது. காதல் கலந்த சண்டைப் படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘ஆர்.எக்ஸ்.100’ வெற்றிக்குப் பிறகு அஜய் பூபதி இயக்கும் இரண்டாவது படம் என்பதால் இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.