தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’ என்று நான்கு படங்களை நடித்துள்ள ராஷிகண்ணா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளார்.
தற்போது ‘அரண்மனை-3’, ‘மேதாவி’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் பெரிய வெற்றிப் படத்தை தர வேண்டும் என்ற விருப்பம் இன்னும் நிறைவேறவில்லை என்று சொல்பவர், தற்போது அது மட்டுமே தமது ஒரே இலக்கு என்கிறார்.
தமிழில் பேசி நடித்தால் ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும் என்று நலன்விரும்பிகள் சிலர் அறிவுரை கூறியதை அடுத்து தமிழ் கற்று வருகிறாராம் ராஷி. அது மட்டுமல்ல, எப்போது சென்னைக்கு வந்தாலும் அனைவரிடமும் தமிழில்தான் பேசுகிறார்.
“ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது உண்மையிலேயே எரிச்சலாக இருந்தது. இரண்டாவது மாதமே இணையம் வழி தமிழ் வகுப்பில் சேர்ந்து தமிழ் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
“எனது தமிழ் ஆசிரியை லீலா சென்னையில் தான் இருக்கிறார். அவரது பயிற்சியால் மற்றவர்கள் தமிழில் பேசுவதைப் புரிந்துகொண்டு பதிலளிக்க ஆரம்பித்துள்ளேன்.
“எனது அடுத்த படம் முதல் நானே தமிழில் பின்னணி குரல் கொடுக்க முடியும் என நம்புகிறேன்,” என்று சொல்லும் ராஷிக்கு, இசையிலும் பெரும் ஆர்வம் உண்டாம்.
இணையம் வழி ‘கித்தார்’ பயிற்சியும் பெற்று வருகிறார். அன்றாடம் தமிழ் ஆசிரியை வழங்கும் வீட்டுப் பாடங்களையும் தவறாமல் செய்து முடிக்கிறாராம்.
“முக்கியமான வார்த்தைகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்கிறேன். அப்போது தான் சரளமாகப் பேச வரும் என்று எனது ஆசிரியை அறிவுறுத்தி உள்ளார்,” என்று சொல்லும் ராஷிக்கு, மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பங்களில் ஒன்றாம்.
மேலும் இளம் இயக்குநர்களில் அட்லியை ரொம்பப் பிடிக்குமாம்.
“மிகக் குறுகிய காலத்திலேயே இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அட்லி. அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். வெற்றிமாறனும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை உருவாக்குகிறார்.
“மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது அனைத்து கலைஞர்களுக்குமே உள்ள ஆசை. நானும் அதற்கு விதிவிலக்கல்ல,” என்று சொல்லும் ராஷி கண்ணா, கிசுகிசுக்களை கண்டுகொள்ள மாட்டாராம்.
அதே சமயம் தன்னைப் பற்றி தவறான தகவலைத் தெரிவித்தால் கோபம் வந்துவிடும் என்கிறார். அண்மையில் உடல் எடையைக் குறைப்பதற்காக சிகிச்சை பெற்றதாக வெளியான தகவல் ராஷியைக் கோபப்பட வைத்துள்ளது.
சக நடிகைகளில் தமன்னாவிடம் தான் திரையுலகம் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசுகிறார்.
‘பெங்கால் டைகர்’ படத்தில் நடிக்கும்போது அழகுப் பராமரிப்பு, மனநலம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாராம் தமன்னா. இன்று வரை அவற்றை தவறாமல் கடைப்பிடித்து வருவதாகச் சொல்கிறார்.
“சிகிச்சை பெறாமல் உடல் கொழுப்பைக் குறைத்தது எப்படி என்று பலரும் ஆச்சரியத்துடன் விசாரிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்றால் முதலில் நம் உடலில் கொழுப்பு சேர வேண்டும். அதனால் தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்வேன். பின்னர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவேன்,” என்கிறார் ராஷி கண்ணா.
கிராமத்துப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது ராஷியின் ஆசைகளில் ஒன்று. அதே போல் விஜய்க்கு ஜோடியாக வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
காதல், திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து சலித்துப் போய்விட்டதாம்.
நடிகைகளிடம் மட்டும் இந்தக் கேள்வியை எழுப்புவது எரிச்சலூட்டுவதாகவும் சொல்கிறார்.
“சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு அடிக்கடி சென்னைக்கு வந்து போகிறேன். ‘சென்னை’ என்று சொல்வதைவிட ‘மெட்ராஸ்’ என்பதுதான் பிடித்திருக்கிறது.
“இப்போது நான் ‘மெட்ராஸ்’ பெண்ணாகிவிட்டேன்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ராஷி.