‘மாஸ்டர்’ பட வெளியீட்டுக்குப் பிறகு விஜய்யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தது.
அந்தப் படத்தை துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தார்.
கொரோனா லாக்டவுனில் ‘தளபதி 65’ படத்துக்கான கதையை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் அதனை விஜய்யிடம் கூறினார்.
விஜய்க்கு கதை பிடித்துப் போகவே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏ.ஆர்.முருகதாஸிடம் முழுக் கதையைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு முழு திருப்தி இல்லை என்றும் இதனால் சில மாற்றங்கள் செய்யச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்து, ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாஸ்டர் பட வெளியீட்டுக்குப் பின்னர் புதிய படத்துக்கான கதையை முடிவு செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஏற்கெனவே தன்னிடம் கதை சொன்ன இயக்குநர்களை அழைத்துப் பேச விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.