ஒருவழியாக ‘சூரரைப் போற்று’ பட வெளியீட்டில் நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்திருக்கிறது. தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதமே ‘சூரரைப் போற்று’ வெளியாகியிருக்க வேண்டும். கொரோனா விவகாரத்தால் வெளியீடு தாமதமானது.
ஏழு மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக இணையத்தில் இப்படத்தை வெளியிடப் போவதாக அறிவித்தார் சூர்யா.
அதன்படி அக்டோபர் 30ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்திய விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்று கிடைக்கத் தாமதமானதால் மீண்டும் பட வெளியீட்டை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் நவம்பர் 12ஆம் தேதி ‘சூரரைப் போற்று’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே சூர்யாவின் 40வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு தரமான சம்பவம் உள்ளது. மீண்டும் சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் சூர்யா அரசியல் தலைவராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவின் 39வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதற்கு ‘வாடிவாசல்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்துக்கும் ஜீ.வி. பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.