அக்ஷரா ஹாசன் நடிக்கத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ‘ஷமிதாப்’ இந்திப் படத்தில் அறிமுகமான பின்னர் கணினி நிபுணர், கடத்தப்பட்ட இல்லத்தரசி என்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் ராஜா ராமமூர்த்தி இயக்கும் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் 19 வயது இளம்பெண்ணாக நடித்துள்ளாராம்.
இப்படத்தின் கதையை எழுதி முடித்ததும் முதலில் அக்ஷராவிடம்தான் கதையைச் சொல்லத் தோன்றியது என்கிறார் ராஜா ராமமூர்த்தி.
அக்ஷராவை நேரில் சந்தித்து கதையைச் சொன்னதும் அவரும் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்க சம்மதித்தாராம். அதன்பிறகு தான் எழுதிய கதையை மேலும் மெருகேற்றியுள்ளார்.
“பவித்ரா கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் கூறியபோது முதலில் தயங்கினேன்.
“உண்மையைச் சொல்லவேண்டுமானால் அந்தக் கதாபாத்திரத்துக்கும் எனது இயல்புக்கும் துளிகூடப் பொருத்தமில்லை. இருவரையும் நேரெதிர் துருவங்கள் என்றுகூட சொல்லலாம்.
“ஆனால், என்னுடன் எந்த வகையிலும் பொருத்திப் பார்க்க இயலாத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதையும் சுவாரசியமான சவாலாகக் கருதியே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
“இயக்குநர் ராஜா தனக்கு என்ன தேவை என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். நிறைய இயக்குநர்களிடம் இத்தகைய தெளிவைக் காணமுடியாது.
“எனவே, இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை,” என்று சொல்லும் அக்ஷரா, நடிகையாக இருப்பது வாழ்க்கையில் கிடைத்த பெரிய வரம் என்கிறார்.
அதிலும் பெற்றோர், சகோதரி ஆகியோரும் நடிப்புத் துறையில் இருந்ததும் இருப்பதும் பெருமை அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
“நடிகராக இருப்பதற்கு நிச்சயம் பெருமைப்பட வேண்டும். அதனால்தான் அதை வரம் என்கிறேன். ஒரு நடிகையாக வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிகிறது.
“இதையும் எனக்குக் கிடைத்த ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். அனைத்து நடிகர்களுமே இப்படித்தான் நினைப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் அக்ஷரா.
“உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தற்போது நடிக்கும் படத்தில் நான்தான் கதாநாயகி என்பதை உணரவே எனக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. அதை உணர்ந்தபோது ‘அம்மாடியோ’ என்று எனக்கு நானே ஆச்சரியப்பட்டுக் கொண்டேன்.
“கதை நாயகி என்பதை உணரத் தொடங்கியதும் தொடக்கத்தில் சற்றே பதற்றமாக இருந்தது. இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு அளித்திருக்கிறார்களே என்று உள்ளுக்குள் ஒருவித பெருமிதமும் ஏற்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன்.
“இப்போது ஒவ்வொரு நாளும் இந்தத் திரைப்படத்தின் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகிறேன்,” என்று சொல்லும் அக்ஷரா, தனிப்பட்ட ஒருவரது உழைப்பால் மட்டுமே ஒரு திரைப்படம் சிறப்பான படைப்பாக உருவாகிவிட முடியாது என்கிறார்.
திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி என்றும் தமது தனிப்பட்ட முயற்சியால் மட்டும் இது சாத்தியமாகி விடாது என்றும் முதிர்ச்சியுடன் பேசுகிறார்.
“என்னதான் நாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் மற்றவர்களின் பங்களிப்பும் தேவைப்படும். இதை மனதிற்கொண்டே செயல்படுகிறேன்.
“ஊரடங்கு முழுமையாக முடிவுக்கு வந்த பிறகு எனது கலைப் பயணம் சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்,” என்று சொல்லும் அக்ரஷா தன்னைப் பற்றிய கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறார்.
தந்தையின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை ஷ்ருதியைப் போன்றே இவரும் தவிர்க்கிறார்.