30 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றிவரும் எம்.வி. பன்னீர்செல்வம் ‘மிருகா’ படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரி யராக அவதாரம் எடுத்துள்ளார்.
ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி இணைந்து நடிக்கும் இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று சொல்லும் பன்னீர், அடுத்து பிரபுதேவாவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படு கிறது.
“பிரபுதேவா சார் இந்தியில் ‘தபாங்’ படத்தை முடித்திருந்த நேரத்தில் அவரிடம் ஒரு கதையைச் சொல்லி இருந்தேன். அவருக்குப் பிடித்திருந்தாலும் சல்மான்கான் மீண்டும் கால்ஷீட் கொடுத்துவிட்டால் நான் மும்பையில் இருந்து கிளம்ப முடியாது.
“எனவே, அடுத்த படத்தையும் முடித்த பிறகே உங்களுடைய படம் குறித்து யோசிக்க முடியும் என்றார். அவர் எதிர்பார்த்தது போலவே சல்மான் நடிக்கும் ‘ராதே’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.
“எனவே, இடையில் நண்பர் நரேஷ் மூலம் ‘மிருகா’ படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. நான் அதை இயக்குவதை விட என்னைப் போலவே திரைப்படக் கல்லூரியில் படித்து திரையுலகுக்கு வந்துள்ள என் உதவியாளர் பார்த்திபன் இயக்கட்டும் என்று நினைத்தேன். தயாரிப்புத் தரப்பில் இதற்கு சம்மதித்தனர்.
“இந்த ‘மிருகா’ ஒரு திகில் படம். உலகம் முழுவதற்கும் அபாயகரமான ஒரு மனிதனைப் பற்றிய கதை. தொடக்கத்தில் இந்தக் கதையில் புலியைக் கொண்டுவரவில்லை.
“ஆனால் இந்தியா முழுவதும் திரையிட வேண்டும் என்றால் பொதுவான ஒரு விஷயம் தேவைப்பட்டது. எனவேதான் தலைப்புக்கு ஏற்ப ஒரு மிருகத்தை கதைக்குள் கொண்டுவரத் தீர்மானித்து புலியைத் தேர்வு செய்தோம்.
“தன்னுடைய பசிக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமே மிருகம் வேட்டையாடும். ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் மட்டும்தான் பணம், புகழ், பதவி, கௌரவம் என அனைத்துக்கும் வேட்டையாடுகிறான். இந்த உண்மையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறோம்,” என்கிறார் படத்தின் கதாசிரியரான பன்னீர்செல்வம்.
இது கதாநாயகிக்கு முக்கியத்து வம் உள்ள கதை. அதுமட்டுமின்றி இதுவரை ஏற்றிராத கதாபாத்திரம் என்பதால் ஆர்வத்துடன் நடிக்க சம்மதித்தாராம் ராய்லட்சுமி.
நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாகவும் தேவ்கில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அருள்தேவ் இசையமைத்துள்ளார். மொத்த படத்தையும் 52 நாட்களில் முடித்துள்ளனர்.
“ஆறு வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார் ராய்லட்சுமி. இதுவரை அவருக்குக் கவர்ச்சி சாயம் பூசப்பட்டு வந்தது. ஆனால், இதில் அத்தகைய ராய்லட்சுமியை ஒரு காட்சியில்கூட பார்க்க முடியாது. இதில் அவரது நடிப்பு தனி முத்திரை பதித்துள்ளது.
“ஸ்ரீகாந்தைப் பொறுத்தவரை அவரது முதல் படத்திலிருந்தே எனக்கு நன்கு தெரியும். படிப்படியாக முன்னேறி நல்ல இடத்தை அடைந்துள்ளார். எப்போதுமே என்னுடன் தொடர்பில் இருப்பவர். அவரது நடிப்பும் பேசப்படும்,” என்கிறார் பன்னீர்செல்வம்.
வரும் ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல்.