தமது இருபத்து ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார் நிவேதா தாமஸ்.
இதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
பிறந்தநாளையொட்டி அண்மையில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நிவேதா. அவற்றில் மிக அழகாக இருப்பதாகவும் அப்படங்கள் வித்தியாசமாக உள்ளன என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளிலும் முத்திரை பதித்து வரும் நிவேதாவுக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அண்மைய சில ஆண்டுகளாக தெலுங்கில் இவருக்கு அதிக வரவேற்பு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு 'ஜென்டில்மேன்' படத்தில் நானியுடன் நடித்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்த ஆண்டே நானியுடன் மீண்டும் இணைந்து நடித்த 'நின்னுக்கோரி' படம் இவரை தெலுங்கு தேசத்தில் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
"இப்போதும் நல்ல படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்கள் என்மீது மிகுந்த அன்பு காட்டி வருகின்றனர். நான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது, எனது அனைத்துச் செயல்பாடுகளையும் ரசிகர்கள் பாராட்டுவது நெகிழ்ச்சி அளிக்கிறது.
"இப்போதும்கூட எனது பிறந்தநாளையொட்டி, சில 'ஹேஷ்டேக்'குகளை உருவாக்கி ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர். எனவே ரசிகர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்கிறார் நிவேதா.
சமூக வலைத்தளங்களில் இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். நிவேதா அணியும் காதணிகள், வளையல்கள், நெற்றிப்பொட்டு, உதட்டுப்பூச்சு உட்பட எதுவாக இருப்பினும் அவை ரசிகர்களை வெகுவாகக் கவர்கின்றன. ஏராளமான ரசிகைகள் அவற்றைத் தேடிப்பிடித்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தற்போது பவன் கல்யாணுடன் 'வக்கால் சாப்' என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் 'சுவாஸா' என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிவேதா.
"மேலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளேன். கூடுமானவரை வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறேன்.
"ரசிகர்கள் என்னிடம் காட்டி வரும் அன்பு ஒருவகையில் வியக்க வைக்கிறது. திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர, அவர்களுக்காக நான் வேறு எதையும் பெரிதாகச் செய்துவிடவில்லை. எனவே, நடிப்பின் மூலம் அவர்களைத் தொடர்ந்து மகிழ்விப்பேன்," என்கிறார் நிவேதா தாமஸ்.

