அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய, தமிழ் வரலாற்று நாவல் பிரியர்களுக்கு எப்போதும் பிடித்த தமிழ் இலக்கிய நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையைத் தழுவி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அதில் நந்தினி, மந்தாகினி என இரண்டு வேடங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவலைப் படமாக்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். முதலில் வரவு செலவு கணக்குகளால் தள்ளிப்போய்க்கொண்டு இருந்தது. அது ஒரு முடிவுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து வடக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவுக்கு வந்தனர். அந்த சமயத்தில் கொரோனா வந்து மீண்டும் மாதக் கணக்கில் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப்பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தேர்வாகினர். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, பார்த்திபன், அமலா பால், திரிஷா ஆகியோரும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இன்னும் இவர்களுக்கான கதாபாத்திரங்கள் ஒதுக்கப்படவில்லை.
தற்பொழுது 150 பேரை வைத்து படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று அறிவிப்பு வெளியானதும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது படக்குழு.
இந்நிலையில் புதிய வேடத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கதைப்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய இரண்டு வேடங்களில் சரத்குமார், பிரபு நடிப்பதாக இருந்தது. பிரபுவுக்கு ஜோடியாக நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருந்தார். தற்போது இந்த ஜோடியை மணிரத்னம் குலுக்கல் முறையில் மாற்றி இருக்கிறார். அதன்படி பிரபு, சரத்குமார் இருவரையும் வேறு முக்கிய வேடங்களுக்கு மாற்றப்பட்டு, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் வேடங்களில் பாலாஜி சக்திவேலும் நிழல்கள் ரவியும் நடிக்க இருக்கிறார்கள்.
பெரிய பழுவேட்டரையர் மனைவியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பார் என்று தெரிகிறது. மணிரத்னம் குலுக்கியிருக்கும் இந்த குலுக்கலில் பாலாஜி சக்திவேல் ஐஸ்வர்யாராய் என்ற 'ஜாக்பட்டை' அவருக்கு ஜோடியாக்கி இருக்கிறார். ஆனால் இதுதான் இறுதியான முடிவா? அல்லது மீண்டும் மணிரத்னம் மறுகுலுக்கல் நடத்துவாரா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும் என்கிறது படக்குழு.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டிருக்கின்றன. நவம்பர் மாதம் படப்பிடிப்புக்குத் திட்டமிடப்பட்டது. வெளிநாடுகளில் தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதிக்காக காத்திருந்தனர். ஆனால், கடுமையான கட்டுப்பாடுகள் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படக்குழுவினர் இத்தாலியில் படப்பிடிப்பு நடத்தச் சென்றனர். ஆனால் அங்கு அமுல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் படக் குழுவைப் படப்பிடிப்பு நடத்தப் போராட வைத்தது. அதனால் 'ராதே ஷ்யாம்' படக்குழு அங்குப் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மணிரத்னம் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை இந்தியாவிலும் அரங்குகள் அமைத்தும் நடத்த முடிவு செய்துள்ளனர். இப்படம் இரண்டு பாகமாக வெளியாக இருந்தாலும் ஒரே கட்டமாக இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். 'லைகா' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனம் கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்கிறது. அதில் எதிர்பாராத விபத்து, படப்பிடிப்பு தடை, இயக்குநருடன் பிரச்சினை, 'பட்ஜெட்' குறைப்பு விவகாரம் என்று பல சிக்கல்களை நிறுவனம் சந்தித்து வருகிறது. அந்தப் பிரச்சனைகள் எதுவும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பைப் பாதிக்கக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர் படக்குழுவினர்.
கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும். எனவே, 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் காணலாம்.

