'தளபதி' விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம் கொரோனா தொற்றினால் தள்ளிப்போனது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த முடிவை மாற்றி தற்பொழுது இயக்குநர் நெல்சனுக்கு அந்த வாய்ப்பை அளித்து இருக்கிறார் விஜய்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'செவன்' ஒளிப்படத்திரை லலித் தயாரிப்பில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் முதலில் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படம் தள்ளிப்போய் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.
தற்பொழுது திரையரங்குகள் திறந்தாலும் குறைந்த அளவு மக்களே திரையரங்கு செல்லமுடியும் என்ற கட்டுப்பாட்டினால் வருமானம் குறையும் என்பதால் படத்தை மீண்டும் தள்ளி வைத்துள்ளனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தளர்ந்துவிடாத படக்குழுவினர் ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி தமிழுடன் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனாவின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் அதனால் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் வரும் பொங்கலுக்கு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் தள்ளி போனதால் விஜய் வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்ததாக முன்பு செய்தி வெளியானது.
அதன்படி பேரரசு, சுதா கொங்கரா, மகிழ் திருமேனி என பல பெயர்கள் அடிபட்டன. இந்த வரிசையில் 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சனும் இணைந்தார்.
நெல்சன் சொன்ன குடும்ப, நகைச்சுவை கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனதால் அதிர்ஷ்ட தேவதை விஜய் மூலமாக நெல்சனைத் தேடி வந்திருக்கிறாள். அந்த தேவதையை இறுகப் பிடித்துக்கொண்டு விட்டார் இயக்குநர் நெல்சன்.
நெல்சன் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கி வருகிறார். இன்னும் 4 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புகள் இருக்கின்றன. இந்தப் படத்தை முடித்த பின் இவர் விஜய் படம் தொடர்பான வேலைகளைத் துவங்குவார் என்று தெரிகிறது.
விஜய்க்கு கூறிய கதையை முதலில் சிவகார்த்திகேயனிடம்தான் நெல்சன் கூறியிருந்தார். 'டாக்டர்' படத்திற்கு பிறகு அதுபற்றி பேசலாம்,' என்று சிவகார்த்திகேயன் முடிவு செய்திருந்த நிலையில்தான், அந்தக் கதையை விஜய்க்கு கூறி அவரின் சம்மதத்தையும் பெற்று விட்டார் நெல்சன்.
எனவே, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துமா என்றால் அதுதான் இல்லை. விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. தான் நடிக்க வேண்டிய கதையில் விஜய் நடிப்பது பெருமைதான் என்று சிவகார்த்திகேயன் கூறியதாக கேள்வி.

