ஆண்டுதோறும் 'இன்டியன் பிலிம் புராஜக்ட்' என்ற அமைப்பு மூலம் நடத்தப்படும் குறும்படப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இந்தப் போட்டியில் இளம் இயக்குநர்கள் கலந்து கொள்வார்கள்.
போட்டி நடத்துபவர்கள் ஒரு வரி மட்டுமே கொடுப்பார்கள். அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு குறும்படம் இயக்க வேண்டும்.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் நடிகை காயத்ரி கலந்து கொண்டார். அவருக்கு 'டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை' என்ற ஒரு வரி கொடுக்கப்பட்டது. அந்த ஒரு வரியை தனது குழுவுடன் இணைந்து விவாதித்து 'ரோட் டூ தும்பா' என்ற குறும்படத்தை இயக்கினார் காயத்ரி.
இந்தக் குறும்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை அவர் கைத் தொலைபேசியில் படமாக்கி உள்ளார்.
இதுகுறித்து காயத்ரி கூறுகையில், "கொடுக்கப்பட்ட 50 மணி நேரத்தில் 20 மணி நேரம் கதை விவாதத்திலேயே முடிந்தது.
"டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் சுயசரிதையில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியை எடுக்க நினைத்தேன். அவர் மிதிவண்டியில் 'ராக்கெட்' பாகங்கள் எடுத்துச் செல்வது போன்ற புகைப்படத்தைப் பார்த்தேன். உடனே அதன் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை முடிவு செய்தோம்.
இந்தியாவில் முதல் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த சரியான இடம் தேடுகிறார்கள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இறுதியாக ஒரு தேவாலயம் அமைந்த இடத்தைத் தேர்வு செய்கின்றனர்.
"ஆலயம் உள்ள அந்த இடத்தைப் பெற முடிந்ததா? ஆன்மிகமும் - அறிவியலும் இரு துருவங்கள். ஆனால், நாட்டிற்காக இவை இரண்டும் ஒன்றிணைந்தனவா என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படத்தை இயக்கினேன்.
"தேவாலயத்தின் பாதிரியார் வேடத்தில நடிகர் பகவதி பெருமாளும் (பக்ஸ்), விக்ரம் சாராபாய் வேடத்தில் நடிகர் கார்த்திக்கும் நடித்திருந்தது படத்திற்கு பலம் சேர்த்தது.
"மேலும் பகவதி பெருமாள் பேசிய வசனங்கள் பெரும்
பாலும் அவரே எழுதியவை. இறுதியில் பாதிரியார் பேசும் வசனங்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
"இந்தக் குறும்படத்தின் ஒளிப்பதிவை 'கழுகு' படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் மேற்கொண்டார். இசை அனிருத். இந்த விருது எனது குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது.
"இப்படத்தை தேர்வு செய்த போட்டி நடுவர்களுக்கும் 'இன்டியன் பிலிம் புராஜக்ட்' தளத்திற்கும் எங்களது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்," என்றார் நடிகை காயத்ரி.
இவர் விஜய் சேதுபதியுடன் மட்டும் 5 படங்களில் நடித்துள்ளார். அவருடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகையும் இவர்தான். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் வரும் இவரது காட்சிகளை யாராலும் மறக்க முடியாது.
இவர் இதுவரை குடும்பப் பாங்கான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். திடீரென்று நவநாகரீக உடையில் படங்கள் பிடித்து அதை தனது 'இன்ஸ்டகிராம்' பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

