சந்தானத்தின் நடிப்பில் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. திரையரங்கில் தன்னுடைய ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம், பல போராட்டங்களுக்கு இடையே ‘ஓடிடி’யில் வெளியிடாமல் திரையரங்கில் படத்தை வெளியிட்டதைப் பற்றி ரசிகர்களுக்கு விளக்கம் அளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 விழுக்காட்டு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது.
இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய பல முன்னணி நடிகர்களின் படங்கள் 2021க்கு தள்ளிவைக்கப்பட்டாலும் கடந்த மே மாதம் வெளியாக வேண்டிய ‘பிஸ்கோத்’ படம் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது.
தீபாவளியன்று வெளியான இந்தப் படத்தை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார் சந்தானம். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சந்தானம், “ஓடிடி’ என்பது பூஜை அறை போன்றது. திரையரங்கம் கோயில் போன்றது.
“பிஸ்கோத் படத்தை ‘ஓடிடி’யில் பார்க்கக்கூடாது. திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் திரையரங்குகளில் வெளியிட்டோம். ரசிகர்களை மட்டுமே நம்பி தமிழ் சினிமா உள்ளது. பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க என்னால் தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளுக்கும் செல்ல முடியாது. அதனால் கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தேன்.
“கொரோனா பயத்தால் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்றால் அனைத்தும் வீணாகிவிடும் என்று இயக்குநரும் தயாரிப்பாளர்களும் திரையரங்கில் படத்தை வெளியிடப் பயந்தனர். ஆனால், தமிழக மக்கள் குறித்து எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் தைரியமாக திரையரங்கில் வெளியிடலாம் என்ற முடிவில் இருந்தேன். என் நம்பிக்கை வீணாகவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.
குடிசைத் தொழிலாக அவரின் தந்தை ‘ஆடுகளம்’ நரேன் ‘பிஸ்கோத்’ தயாரித்து விற்பனை செய்கிறார். தொழிலில் அவருக்கு உதவியாக அவரின் நண்பர் ஆனந்த்ராஜ் இருக்கிறார்.
தன் மகனை உயர்வான இடத்தில் வைக்கவேண்டும் என்பது நரேனின் ஆசை. இந்நிலையில் சந்தானம் குழந்தையாக இருக்கும்போது அவரின் தந்தை திடீரென இறந்துவிடுகிறார். பின் சந்தானம் என்ன ஆனார்? ‘பிஸ்கோத்’ தயாரிக்கும் தொழில் என்ன ஆனது? அப்பா நரேனின் ஆசை நிறைவேறியதா என்பது இந்த ‘பிஸ்கோத்’ தயாரிப்பு.
இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். சந்தானம் படம் என்றால் படம் பார்க்கும் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும்தானே. அந்த சிரிப்போடு திரையரங்குக்குள் வந்தவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் மனதை நிறைத்து வெளியே அனுப்புகிறார் சந்தானம். சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கலாம்.
ஆனந்த் ராஜ் இந்தப் படத்தில் வருவதுபோலவே தொடர்ந்து செய்தால் அவருக்கு நல்ல வாய்ப்பு. நகைச்சுவைக்கு சந்தானத்துடன் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர். மூவரின் கூட்டணியும் சிரிப்புடன் படம் பார்ப்பவர்களைத் திக்கு முக்காட வைக்கிறது. இதற்காகவே இயக்குநருக்கும் நன்றி சொல்லவேண்டும்.
பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இப்படம் 400வது படம். கலை நயம் குறையாத அதே முகபாவம். அவர் கதை சொல்லும்போது இன்னும் கொஞ்சம் அழகு. நடன இயக்குநர் சிவசங்கரும் அவரின் நண்பர்களும் இந்தப் படத்தில் கலக்குகிறார்கள்.
நகைச்சுவை நடிகர்களின் கலக்கலான கூட்டணி ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கிறது. மற்றவர்கள் பேசும் சில வசனங்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பேசுகிறது. அழுத்தமான கதை மட்டும் இல்லை என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.