கொரோனா விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிலையில் முன்னணி நடிகர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினியைப் பொறுத்தவரை ஜனவரி வரை யாரையும் சந்திக்க விரும்பவில்லையாம். தற்போது சென்னைக்கு அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி இருப்பவர், யோகா, தியானம் செய்வது, நாளேடுகள் படிப்பது, தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளைக் கவனிப்பது என பொழுதைக் கழிப்பதாகத் தகவல்.
மிக முக்கியமான விஷயம் என்றால் மட்டும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசியில் பேசிவிடுகிறாராம். ‘அண்ணாத்த’வுக்குப் பிறகு இவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது.
‘இந்தியன்-2’ பல்வேறு சிக்கல்களால் முடங்கியுள்ள நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கமல்.
‘இந்தியன்-2’ல் நாயகியாக ஒப்பந்தமான காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், மற்றொரு நாயகியான ரகுல் பிரீத்சிங்கோ போதை மருந்து விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதனால் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைக் கைவிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
‘பேரரசு’ இயக்கும் படத்தில்தான் விஜய் அடுத்து நடிப்பார் என்று கூறப்படுவது தவறான தகவல் என்று ஒரு தரப்பு கூறிவருகிறது. ஆனால், பேரரசு தரப்பில் திடீரென ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டு அவர் கதை விவாதத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் சிலர் வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். எது எப்படியோ கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குநரை நிச்சயம் முடிவு செய்துவிடுவார் என்பதே இப்போதைய தகவல்.
‘வலிமை’ படத்தை இந்தாண்டே முடித்துவிடவேண்டும் என்பதுதான் அஜித்தின் திட்டமாக இருந்தது. அவரது கொள்கைப்படி ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த பட வேலையில் இறங்குவார்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டாராம் அஜித். ஆனால் கேரளாவில் பிருத்விராஜ், ஹைதராபாத்தில் தமன்னா என பலரும் கொரோனா கிருமிப்பிடியில் சிக்கியதை அடுத்து படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லிவிட்டாராம்.
அடுத்த கல்வியாண்டில்தான் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றும் அவர் முடிவு செய்திருப்பதாகத் தகவல். தற்போது உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார் அஜித்.
கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கு வேலூரில் திருமணம் நடைபெற்றது. கார்த்தியால் நேரில் சென்று வாழ்த்த முடியவில்லை.
எனினும் மணமேடையிலேயே இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டியை வெளியிட வைத்துத் திருமணப் பரிசை அளித்துள்ளார். இதைவிட மிகச்சிறந்த பரிசு எனக்குக் கிடைக்காது என்று மகிழ்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
‘சுல்தான்’ படம் முடிந்த பின்னர் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. மித்ரன் சொன்ன கதையில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறாராம். அந்தப் பணி முடிந்த கையோடு படப்பிடிப்பைத் துவங்க உள்ளனர்.
‘டாக்டர்’, ‘அயலான்’ படங்களை அடுத்து தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். இதில் ரகுல் பிரீத்சிங்கை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கும் எனத் தகவல்.