இன்றைய காலகட்டத்தில் இளையர்கள் கூகல் தளத்தில் அதிகம் தேடிய ஒரு நடிகை ராஷ்மிகா மந்தனாதான்.
கடந்த சில ஆண்டுகளாக கூகலில் அதிகம் தேடப்பட்டவர்கள் பாலிவுட் நடிகைகள்தான். ஆனால், இந்த ஆண்டு அவர்களைப் பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘சலோ’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்தார்.
அந்தப் படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அதனால் அந்தப் படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டன. அவையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.
அதையடுத்து, மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற படத்தில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகையானார் ராஷ்மிகா.
அதன் பின்னர் நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த படம் ‘பீஷ்மா’. இந்தப் படம் அவருக்கு இன்னும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறார் ராஷ்மிகா.
இந்த நிலையில், இவ்வாண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேட வைத்தவர் என்கிற மகுடத்தை ராஷ்மிகாவுக்கு கூகல் வழங்கியுள்ளது.
கூகலில் ‘National Crush of India 2020’ என தேடினால், ராஷ்மிகாவின் பெயரும் அவர் குறித்த விவரங்களும் காட்டப்படுகின்றன.
இந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட பாலிவுட் நடிகைகளைக்கூட கூகல் தேடலில் பின்னுக்குத் தள்ளி ராஷ்மிகா இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
நடிகை ராஷ்மிகா அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.
இதுதவிர, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகா நடித்து முடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தம்பிக்கு ஜோடியான ராஷ்மிகா தற்பொழுது அண்ணனுக்கும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் ராஷ்மிகாதான் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
மேலும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.