கடந்த ஒரு மாதமாக குக்கிராமம் ஒன்றில் தங்கிப் பொழுதைக் கழித்துள்ளார் நடிகை ஓவியா.
வெள்ளந்தியான கிராம மக்களுடன் பழகியது மனதுக்கு நிம்மதியை அளித்ததுடன் தன் கவலைகளையும் மறக்கச் செய்ததாகக் குறிப்பிடுகிறார்.
கொரோனா ஊரடங்கு பலரையும் புலம்பவைத்துள்ளது. ஆனால் ஓவியாவோ தமக்கு அதனால் நன்மைதான் விளைந்தது என்கிறார்.
ஊரடங்கின்போது சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்றுவிட்டாராம். அங்கு தனது தந்தையுடன் தங்கியிருந்து அவருக்குத் தேவையானதைச் செய்துகொடுத்து அன்பாகக் கவனித்துக் கொண்டாராம்.
“அப்பாவுடன் நிறைய பேசினேன். கூடவே நான் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியையும் கொஞ்சி மகிழ்ந்தேன். கேரளா போரடித்ததும் இடத்தை மாற்றிக்கொண்டேன். அப்போதுதான் நகர்ப்புற ஆரவாரமற்ற, வசதிகள் அதிகமில்லாத ஓரிடத்தில் தங்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.
“கொடைக்கானலில் நான் தங்கியிருந்த கிராமம் பார்க்க ரம்மியமாக இருக்கும். அங்குள்ள மக்களும் பாசத்தோடு பழகினார்கள். கைபேசி சிக்னல் கூட கிடைக்காத பகுதி. வசதி இல்லை என்றாலும் மக்களோடு மக்களாகப் பழகியதால் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. அந்தளவுக்குப் பாசம் காட்டுகிறார்கள்.
“சுருக்கமாகச் சொன்னால் நான் ஒரு நடிகை என்பதையே மறந்துபோனேன். மீண்டும் என்னைப் புதுப்பித்துக் கொண்டதாகத் தோன்றுகிறது,” என்று சொல்லும் ஓவியா தற்போது ஒரு சுற்று இளைத்திருக்கிறார்.
முன்பெல்லாம் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவாராம். மொறுமொறு நெய் தோசை என்றால் ஒரு பிடி பிடிப்பாராம். அண்மைக்காலமாக சற்றே உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதாகச் சொல்கிறார்.
“இப்போது யோகாசனத்தில் கவனம் செலுத்துகிறேன். வழக்கமான உடற்பயிற்சியிலும் ஈடுபடுகிறேன். ஒருவேளை இதுதான் உடல் இளைக்க காரணமாக இருக்கக்கூடும். எப்படியோ ஆரோக்கியமாக இருந்தால் நல்லதுதானே,” என்று சொல்லிச் சிரிப்பவர், தன் உடலில் மேலும் ஓரிடத்தில் பச்சை குத்தியுள்ளார்.
தமது இடது கால் மணிக்கட்டை ஒரு பாம்பு சுற்றியிருப்பது போல் காட்சி தரும் ‘டாட்டூ’வை வரைந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டாராம்.
“எலும்புகள் அதிகமுள்ள பகுதியில் பச்சை குத்திக்கொண்டால் வலி எடுக்கும். அவ்வளவு சுலபமாக வரையமுடியாது. அதனால்தான் பலரும் சதைப்பிடிப்புள்ள இடத்தில் பச்சை குத்துவார்கள். ஆனால், வலி ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவோடு பாம்பு உருவத்தைப் பச்சை குத்திக்கொண்டேன்.
“வாழ்க்கையில் நான் சந்தித்த, இனி சந்திக்கப் போகும் வலிகளை விட இது ஒன்றும் பெரிய வலி அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை இது ஒருவகையில் மனோதத்துவ சிகிச்சை போன்றதுதான். பயத்தைக் கடக்கும்போது மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். அதற்கு பயத்தை நாம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும்,” என்கிறார் ஓவியா.
சமூக வலைத்தளங்களில் ‘ஓவியாவின் ரசிகர் படை’ இன்றளவும் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. ரசிகர்களின் அன்புக்கு முன்னால் தனக்கு எதுவுமே பெரிதல்ல என்று இவரும் பாசம் காட்டுகிறார்.
“ரசிகர்களுக்கு அறிவுரை ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், யதார்த்தத்துக்கு ஒத்துவராத கனவுகளைக் கண்டு அதுபோல் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைத்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
நிகழ்காலத்தைக் கொண்டாடுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக்குங்கள். அதன்மூலம் மகிழ்ச்சியாக வாழுங்கள்,” என்று அக்கறையுடன் அறிவுறுத்துகிறார் ஓவியா.