‘சூரரைப் போற்று’ படத்தின் வசூல் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை. எனினும் விமர்சன ரீதியில் கிடைத்திருக்கும் வரவேற்பு அப்படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதிலும் படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
“நான் ஏற்று நடித்த பொம்மி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எனது நடிப்பு சூர்யா சாருக்கு இணையாக இருந்ததாக பலரும் பாராட்டுவதைக் கேட்கும்போது பெருமையாக உணர்கிறேன்.
“இதுதான் நான் முதன்முறையாக எனது கதாபாத்திரத்துக்குப் பின்னணி பேசிய படம். மேலும் மதுரை பெண்ணாக, வட்டார மொழியில் நான் பேசியிருப்பதற்கும் பாராட்டுகள் கிடைக்கின்றன,” என்று முகம் நிறைந்த சிரிப்புடன் பேசுகிறார் அபர்ணா.
‘இப்ப போனாத்தான் என்னவாம்...’ என்பதுதான் இவர் தமிழில் பின்னணி பேசிய முதல் வசனம். படங்களில் நடித்தபடியே கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறார். தமிழில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படம் தவிர, மலையாளத்திலும் சில பாடல்களைப் பாடியுள்ளார் அபர்ணா. படப்பிடிப்புக்கு மத்தியில் ஒருமுறை கூட இசை வகுப்பில் பங்கேற்காமல் இருந்ததில்லையாம்.
தனது உடல் பருமன் குறித்து சிலர் விமர்சிப்பதைத் தாம் அறிந்திருப்பதாகவும் அவை குறித்துத் தாம் கவலைப்படுவதில்லை என்றும் சொல்கிறார் அபர்ணா. உடல் பெருத்திருந்தால் நாயகியாக நடிக்கக்கூடாது என ஏதேனும் விதிமுறை உள்ளதா? அப்படிப்பட்டவர்களால் சிறப்பான நடிப்பை வழங்க முடியாதா? என்றும் கேள்வி எழுப்புகிறார்.
“பனிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மாதாந்திரத் தேர்வில் வேதியியல் பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. வாழ்க்கையில் எனது முதல் தோல்வி என்றால் அதுதான். அந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியைகள் என்னைச் சமாதானப்படுத்தி மீண்டும் அக்கறையுடன் பாடம் எடுத்து அடுத்த தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வைத்தனர்.
“அதன் பிறகு கணக்கும் அறிவியலும் எனக்குப் பிடித்தமான பாடங்களாக மாறியது தனிக் கதை. தனி மனிதனின் வெற்றி தோல்வி குறித்த ‘சூரரைப் போற்று’ அனைவருக்கும் ஏற்ற படமாகவும் தங்கள் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கக்கூடிய படமாகவும் உள்ளது. அதுவே படத்தின் வெற்றிக்குக் காரணம்,” என்கிறார் அபர்ணா.
இதுவரை தமக்குக் காதல் அனுபவம் ஏற்பட்டதில்லை என்று குறிப்பிடுபவர், காதல் குறித்துப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என்கிறார். சிறு வயதில் மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் மீது மட்டும் ஒருவித ஈர்ப்பு இருந்ததாம்.
“இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பரதநாட்டியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதன் பலனாக பள்ளிக்கூட அளவிலான பரதநாட்டியப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றேன். அதற்காக பலரும் என்னைப் பாராட்டினர். வாழ்க்கையில் பெற்ற முதல் வெற்றி என்று அதைக் குறிப்பிடலாம்.
“வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் நம் முயற்சியைத் தொடரவேண்டும் என்பது முக்கியம். என்றாவது ஒருநாள் வெற்றி நம் பக்கம் திரும்பும் என்பதே ரசிகர்களுக்குச் சொல்ல விரும்பும் தகவல்,” என்கிறார் அபர்ணா.
‘சூரரைப் போற்று’ படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக ஜோதிகாவும் பாராட்டுத் தெரிவித்தாராம். அவ்வளவு பெரிய நடிகை தம்மைப் பாராட்டியது மகிழ்ச்சியை அதிகப்படுத்தி உள்ளதாக குறிப்பிடுகிறார்.
இதற்கிடையே இந்தியாவில் இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த படம் என்று ‘சூரரைப் போற்று’ படத்தை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
‘இந்தியாவின் பெருமை’ என்று குறிப்பிட்டு ரசிகர்கள் பகிர்ந்துவரும் பதிவு இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.