விஜய் நடிக்கும் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஆனால் ‘தளபதி 65’ குறித்துப் பல்வேறு வதந்திகள் மட்டும் வாரந்தோறும் வெளியாகி வருகின்றன.
பொதுவாக தாம் நடிக்கும் ஒரு படத்தின் பணிகள் பாதி முடிந்த உடனேயே தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் விஜய். ஆனால், ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் எட்டு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அவரிடமிருந்து ‘தளபதி 65’ குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப்குமார் என செய்தி வெளியிட்டுள்ளது. இவர் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கியவர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார்.
நெல்சன் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் இதையடுத்து கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, புதுப் படத்தில் இந்தி நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடிப்பார் என்றும் இந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாம் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கில ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிட்டதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல தமிழ் ஊடகமும் ‘தளபதி 65’ குறித்து ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.
விஜய்யை அடுத்து இயக்கப் போவது பிரபல இயக்குநர் எஸ்ஜே. சூர்யா என்பதே அத்தகவல்.
முன்னதாக, பாண்டிராஜ், மகிழ்திருமேனி, சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ் என விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளவர்களின் பட்டியலில் பல பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இறுதியில் முருகதாஸ்தான் இயக்குநர் என்று தகவல் வெளியானது. அவர் சொன்ன கதைச்சுருக்கம் பிடித்துப்போனதை அடுத்து அதில் மேலும் பல அம்சங்களைச் சேர்த்து திரைக்கதை அமைக்குமாறு விஜய் கேட்டுக் கொண்டதாக முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனினும் படத்தைத் தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சம்பள விஷயமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகதாஸ் அப்படத்தில் இருந்து விலகினார்.
இதையடுத்து, நெல்சனின் கதையை விஜய் தேர்வு செய்தார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இப்போதோ எஸ்.ஜே. சூர்யாதான் விஜய்யை அடுத்து இயக்குவதாக தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவான ‘குஷி’ படத்தில் விஜய் நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கிய ‘நியூ’ படத்தில் அஜித்தும் ஜோதிகாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என அஜித் விடுத்த கோரிக்கையை எஸ்.ஜே. சூர்யா ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் அஜித் வெளியேற அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவே நாயகனாக நடித்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் முழு நேர நடிகராக மாறிப்போனார்.
இந்நிலையில் ‘டாக்டர்’ படம் முடிந்த பிறகே விஜய் படத்தை இயக்க முடியும் என்று நெல்சன் கூறியதை அடுத்தே விஜய் தரப்பு உடனடியாக எஸ்.ஜே. சூர்யாவையே அணுகியதாகக் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது வெற்றி பெற்ற படங்களை மறுபதிப்பு செய்வதில் பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பி.வாசு இயக்கத்தில் உருவாகி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெற்றி பெற்ற ‘நடிகன்’ படத்தின் மறுபதிப்பில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
‘நடிகன்’ படத்தில் சத்யராஜ், கவுண்டமணி, குஷ்பு, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.