தெலுங்குத் திரைப்படமான 'ஆலா வைகுண்டபுரம்லோ' என்ற படத்தின் மறுபதிப்பில் அல்லு அர்ஜுன் நடித்த வேடத்தில் சிவகார்த்திகேயன் தமிழில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது 'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரை இயக்குநர் சீனு ராமசாமி கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே நீங்களும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்று பாராட்டி இருக்கிறார்.
'கோலாமாவு கோகிலா'வை இயக்கிய இயக்குநர் நெல்சன்தான் 'டாக்டர்' படத்தையும் இயக்குகிறார். 'டாக்டர்' படத்தில் ஒரு பாடல் காட்சியைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்தாகிவிட்டது என்று கூறுகின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம்.
மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மனித உறுப்பு கடத்தலை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. கிறிஸ்மஸ் விடுமுறையில் திரையரங்கில் இந்தப் படத்தை வெளியிடத் திட்ட மிட்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'அயலான்'. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறா்.
இது அறிவியல் புனைகதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவா மூன்று வேடங்களில் நடிப்பார் என்றும் ரகுல் ஒரு வானியலாளராக நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஷா கோப்பிகரைத் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் காணலாம்.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' '24AM ஸ்டுடியோ'சால் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
எந்தவொரு ஊதியத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பணியாற்றி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தெலுங்குப் படத்தின் மறுபதிப்பில் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு பதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மூத்த நடிகர் ஜெயராம் அல்லு அர்ஜுனின் தந்தையாகவும் சத்யராஜ் அவரது தாத்தாவாகவும் நடித்திருந்தனர்.
'ஆலா வைகுண்டபுரம்லோ' தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்ல, கேரளாவிலும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் மறுபதிப்பில்தான் சிவகார்த்திகேயன் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான 'கனா' படம் இந்தியில் மறுபதிப்பாக இருக்கிறது.
இந்தப் படத்தில் கிரிக்கெட் ஆடும் பெண்களுக்கு பயிற்சியாளராக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்தியிலும் இவருடைய வேடத்தை இவரே செய்ய இருக்கிறார். அதன்மூலம் இந்தியிலும் கால்பதிக்கிறார் சிவா.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி அனைத்துலக போட்டிகளில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
அதற்கு தன்னுடைய டுவிட்டரில் "எங்களை அதிகபட்சம் ஊக்குவித்ததற்கும் பொழுதுபோக்கைச் சிறப்பாகக் கொடுத்ததற்கும் நன்றி. நீங்கள் என்றுமே ஓர் அற்புதமான தலைவர் தோனி. எங்களை ஆச்சரியப்படுத்த உங்களிடம் வெவ்வேறு திட்டங்கள் இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். வாழ்த்துகள்," என்று பதிவிட்டிருந்தார்.
சிவகார்த்திகேயனின் இந்த டுவிட்டைக் குறிப்பிட்டு இயக்குநர் சீனு ராமாசாமி "சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையில் நட்சத்திரமாக ஆன நீங்களும் அதிக ஊக்கமும் பொழுதுபோக்கும் தந்தவர் சிவகார்த்திகேயன்.
"தோனியைப் போலவே உங்கள் களத்தில் பெரும்பாலும் புதியவர்களுக்கும் நண்பர்களுக்கும் வாய்ப்பு தந்தீர்கள். அடிமட்டத்திலிருந்து வந்த நீங்கள் இருவரும் வெற்றி பெற்றவர்கள்தான்," என்று பதிவிட்டிருந்தார்.
விஜய் சேதுபதிக்கு பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த சீனு ராமசாமியின் இந்த டுவீட் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

