மக்களை எளிதில் அடைய முடியும் என்பதை உணர்ந்த நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக ஓர் ஒளிஅலையைத் தொடங்க இருக்கிறார்.
தற்பொழுது திரையுலகப் பிரபலங்கள் மற்ற சமூக வலைத்தளங்களைப் போல் ‘யுடியூபி’லும் ஒளிஅலையைத் தொடங்கி மக்களுடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தளபதி விஜய்யும் தற்போது ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அதிகாரபூர்வமாக ஒரு ‘யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்க இருக்கிறார்.
அந்த ஒளிஅலையை இயக்க விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் பொறுப்பேற்றிருக்கிறார்.
இனி விஜய் மக்கள் இயக்கத்தின் திட்டங்கள், பணிகள், விஜய் பற்றிய திரைச் செய்திகள் அனைத்தையும் அந்த ஒளிஅலையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்திருந்த ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு சம்பந்தமாக பலவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன் ‘மாஸ்டர்’ படத்தை ‘நெட்ஃபிளிக்ஸ்’ பெரும் தொகை கொடுத்து வாங்கியதாக செய்திகள் வெளியாயின. அதையடுத்து அந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.
அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் “தலைவனின் படம் திரையரங்கினில்தான் வெளியாகவேண்டும். சரியான முடிவை வெளியிடுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம், “மாஸ்டர்’ படத்தை ‘நெட்ஃபிளிக்ஸ்’ வாங்கியது உண்மைதான். அதாவது திரைஅரங்குகளில் படம் வெளியான பிறகு ‘நெட்ஃபிளிக்ஸ்’ இணையத் தளத்தில் வெளியிட படத்தை வாங்கினார்கள்.
“படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்கினில் வெளியாவது உறுதியான செய்தி. அதனால் விஜய் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்,” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அனைத்தும் முடிவான நேரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை குறைந்துள்ளதால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட தொகைக்கு ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட முடியாது என்று கூறி, படத்தை பாதி விலைக்கு கேட்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதனால் படக்குழுவினர் அவர்களிடம் பெற்ற முன்பணத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு ‘ஓடிடி’யில் படத்தை வெளியிட்டு விடலாம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் அதற்கு விஜய் ஒப்புக்கொள்ளாததால் ‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட மீண்டும் திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்புத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்திற்காக நடிகர் விஜய் பெற்றுக்கொண்ட 80 கோடி ரூபாய் சம்பளத்தில் ஒரு பாதியைக் குறைத்துக்கொண்டால் யாருக்கும் எந்த நஷ்டமும் ஏற்படாது என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் ஆசையான, "திரையரங்கில் படம் பார்க்கவேண்டும்," என்ற வேண்டுகோளுக்கு இணங்கி விஜய் நல்ல முடிவெடுப்பார் என்று காத்திருக்கிறது கோலிவுட்.