‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றி அதில் நடித்த அனைவருக்குமே நல்ல பாராட்டுகளையும் புது வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. அந்த வகையில் ஸ்மிருதி வெங்கட் உற்சாகத்தில் இருக்கிறார்.
அப்படத்தில் நாயகன் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாகவும் குடும்பத்துக்காக தியாகம் செய்யும் பொறுப்புள்ள பெண்ணாகவும் நடித்திருந்தார் இவர்.
இந்நிலையில் நயன்தாரா, ஊர்வசி போன்ற அனுபவ நடிகைகளுடன் இணைந்து நடித்தது தமக்குப் பலவகையிலும் பயனுள்ளதாக அமைந்தது என்கிறார் ஸ்மிருதி வெங்கட்.
கடந்த ஆண்டு வெளியான ‘தடம்’ படத்தில் இவரும் ஒரு நாயகி.
அதன்பின்னர் தனி நாயகியாக நடிக்கவேண்டும் என விரும்பிய நிலையில் ஆர்.ஜே. பாலாஜியைச் சந்தித்தாராம்.
‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதையையும் தனக்கான கதாபாத்திரம் குறித்தும் அறிந்தவுடன் வெகுவாக ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார்.
“தெய்வாமிர்தம் கதாபாத்திரத்தை நான் வெகுவாக ரசித்தேன். நல்ல மன உறுதியுள்ள அன்பான, அக்கறையுள்ள பெண். அதனால் அந்தக் கதாபாத்திரத்துடன் என்னைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே ஏற்பட்டது.
“நான் மட்டுமல்ல, எந்தவொரு பெண்ணும் தெய்வாமிர்தமாக இருக்கவே விரும்புவாள். இதில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என உறுதியாக நம்பினேன். மேலும் வளர்ந்துவரும் நடிகையான எனக்கு மிகப்பெரிய படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாகவும் அமைந்தது,” என்று இப்படத்தில் நடித்ததற்கான காரணங்களை விவரிக்கிறார் ஸ்மிருதி வெங்கட்.
‘மூக்குத்தி அம்மன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் பக்திப் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புவதாகக் குறிப்பிடுபவர், பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்கள் அதிகரிப்பது திரையுலகத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்கிறார்.
“நயன்தாரா எதைச் செய்தாலும் அது ரசிகர்களை ஈர்க்கும். அந்தளவு மிக நேர்த்தியான நடிகை. அவரது உடை, சிகையலங்காரம், உடல் மொழி, கேமரா முன்னால் அவர் நடிக்கும் விதம் என எல்லாமே மிகக் கச்சிதமாக இருக்கும். தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்கிறார். இவை எதிலும் அவர் எந்தவிதக் குறையும் வைப்பதில்லை.
“அனைத்தையும் மீறி நேரம் தவறாமை என்பதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் வீணாக ஏதும் பேசமாட்டார், ஒரு நிமிடத்தைக் கூடவீணடிக்க மாட்டார். இதுபோன்ற விஷயங்களில் அவரைப் பின்பற்ற விரும்புகிறேன்.
“படப்பிடிப்பில் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் நயனும் ஊர்வசியும், கேமரா இயங்கத் தொடங்கியதும் சட்டென சீரியஸாக நடிக்கத் தொடங்கி விடுவார்கள். அதனால் நாமும் உடனடியாக காட்சிக்குள் செல்ல வேண்டியிருக்கும்.
“இருவரது திறமையையும் நேரில் கண்டு வியந்து போனேன். அதிலும் ஊர்வசி நம்முடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டு அடுத்த நிமிடமே தனக்கான காட்சியில் அழுது புலம்பி நடிப்பது அவரது அனுபவத்தையும் திறமையையும் வெளிக்காட்டுவதாக இருந்தது,” என்று சொல்லும் ஸ்மிருதி வெங்கட், அடுத்து சத்யராஜுடன் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களிலும் நடிப்பாராம்.
“முன்னணி நடிகரான பிறகும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றங்களில் நடிக்க தயங்குவதே இல்லை. பிறகு வளரும் நடிகையான நான் ஏன் தயங்க வேண்டும்?” என்று கேட்கிறார் ஸ்மிருதி.