'நெற்றிக்கண்' படம் ரசிகர்களுக்கு அனைத்து வகையிலும் மனநிறைவைத் தரும் என்கிறார் நயன்தாரா.
மிலிந்த்ராவ் இயக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார் மிலிந்த்ராவ். இவர் இயக்கிய 'அவள்' படம் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதன்பின்னர் மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு 'நெற்றிக்கண்' மூலம் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார்.
"நல்ல கதையைத் தரவேண்டும் என்பதற்காக மூன்றாண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டு எனது குழுவுடன் உழைத்தேன். அதன்பிறகு கதையை நயன்தாராவிடம்தான் முதலில் சொன்னேன். ஒரு சராசரி பார்வையாளராக 2 மணி நேரம் கதை கேட்டவர், அதன் முடிவில் தாமே அதை தயாரிப்பதாகத் தெரிவித்தார்.
"அவரது இந்த முடிவே எனது முதல் வெற்றியாகத் தோன்றியது. அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது. பிறகு விக்னேஷ் சிவனைச் சந்தித்து கதை சொன்னவுடன் அவரும் திருப்தி தெரிவித்தார். ஒரு தயாரிப்பாளராக எந்தக் கெடுபிடியும் இன்றி எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது," என்கிறார் மிலிந்த்ராவ்.
கதைப்படி நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக வருகிறாராம். இந்தக் கதாபாத்திரத்துக்காக மிகவும் மெனக்கெட்டாராம்.
பார்வையற்ற ஒரு பெண்ணின் தோற்றம், உடல்மொழி, உடையணியும் பாங்கு, கைப்பிடியுடன் நடப்பது என்று ஒவ்வொரு விஷயத்துக்காகவும் முறையாகப் பயிற்சி மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். மறுநாள் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளுக்கான வசனங்களை முந்தைய நாள் இரவே படித்து மனப்பாடம் செய்துவிடுவாராம்.
"ஏராளமான படங்களில், பெரிய நாயகர்களுடன் இணைந்து நடித்த பிறகும் தனி நாயகியாக வெற்றிப் படங்களைத் தந்த பிறகும் இந்தளவு அர்ப்பணிப்புடன் ஒரு கதாநாயகி இருப்பது எனக்குப் பெரிய விஷயமாகப் படுகிறது. நயன்தாராவைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அவரை உச்ச நட்சத்திரம் என்று ரசிகர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது," என்கிறார் மிலிந்த்ராவ்.
நகரிலுள்ள இளம்பெண்களை சைக்கோ குணாதிசயம் கொண்ட ஒருவன் அடுத்தடுத்து கடத்திச் செல்கிறான். இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இளம்பெண் தன்னுடைய அறிவை, அதாவது மூன்றாவது கண் எனக் குறிப்பிடப்படும் நெற்றிக்கண்ணைப் பயன்படுத்தி அவனைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதை. அஜ்மல், 'காலா' மணிகண்டன், 'வடசென்னை' சரண் என்று பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"நயன்தாராவுடன் மோதுமளவுக்கு பலமான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளோம். தொழில்நுட்ப ரீதியில் நல்ல குழு அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த படம் 'நெற்றிக்கண்'. அந்தத் தலைப்பு எனது கதைக்குப் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.
"மேலும் பிரபலமான தலைப்பு என்பது கூடுதல் பலமாக இருக்கும். அதனால் தலைப்புக்கான உரிமையைக் கேட்டு கவிதாலயா நிறுவனத்திடம் பேசினோம். கொஞ்சம்கூட தயங்காமல் அனுமதி அளித்தனர். நயன்தாரா மேடம் தமிழில் நடித்த முதல் படத்தை கவிதாலயா நிறுவனம்தான் தயாரித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
"ஊரடங்கின்போது படப்பணிகள் பாதிக்கப்பட்டன. அது முடிவுக்கு வந்து படப்பிடிப்பைத் தொடங்கலாமா என்று கேட்டதும் தைரியமாக 'நான் தயார்' என்றார் நயன்தாரா. அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து படப்பிடிப்பை நடத்தினோம்.
"படக்குழுவில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதனால் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி படப்பிடிப்பை சுமூகமாக முடித்துள்ளோம்," என்கிறார் மிலிந்த்ராவ்.

