வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் என நான்கு வெற்றிப்பட இயக்குநர்கள் சேர்ந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் 'பாவக் கதைகள்'. நான்கு கதை. வெவ்வேறு கதைக்களம் என்றாலும் 'சாதி வெறி, ஆணவக்கொலை' என்ற ஒரு மையப்புள்ளியில் பயணிக்கிற படங்களாக இருக்கின்றன.
முதல் கதை தங்கம். இதை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். சாந்தனு, காளிதாஸ், பவானிஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மளிகைக் கடை வைத்திருப்பவரின் மகனான சாந்தனு, பால்ய கால நண்பனான வேறு மதத்தைச் சேர்ந்த காளிதாஸ் சகோதரி பவானிஸ்ரீயைக் காதலிக்கிறார்.
காளிதாஸ் ஒரு திருநங்கை, மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக பணம் சேர்க்கிறார். ஆனால், அவரைப் பெற்றோரும் ஊர் மக்களும்
வெறுக்கிறார்கள்.
தனது நண்பன் சாந்தனு மீது காதலில் இருக்கும் காளிதாஸ், நண்பன் தன் தங்கையைக் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் சிறு வருத்தத்திற்குப் பின் அவர்கள் ஊரை விட்டு ஓட உதவி செய்
கிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'தங்கம்' கதை.
காளிதாஸ் நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். திருநங்கை கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் காளிதாஸ். சாந்தனு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காதல் கதையை திருநங்கை மூலமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. சமூகத்தில் திருநங்கைகள் படும் அவலத்தை ஒளிவுமறைவின்றி காட்டியிருக்கிறார்.
இரண்டாவது கதை 'லவ் பண்ண விட்டுடணும்'. இதை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இசை அனிருத், அஞ்சலி, கல்கி கோச்சலின், பதம்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
கலப்புத் திருமணம் செய்துவைத்து அவர்களை ஆணவக்கொலை செய்து வருகிறார் பதம் குமார். ஜாதி வெறி பிடித்த இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சாதி உள்ளவர்களைக் காதலிக்
கிறார்கள். ஆணவக்கொலை செய்து வரும் பதம் குமார் தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பதே படத்தின் கதை.
படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அஞ்சலி. சந்தோஷம், மகிழ்ச்சி, கவர்ச்சி என நடிப்பில் அசத்தி இருக்கிறார் அஞ்சலி.
தந்தையாக வரும் பதம் குமார், முதன் முதலில் நடித்தாலும் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவருக்கு அடியாளாக வரும் ஜாபர் சாதிக் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். கல்கி கோச்சலின் அட்டகாசமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.
மூன்றாவது கதை 'வான்மகள்'. இந்தக் கதையை கவுதம் மேனன் இயக்கியதுடன் சிம்ரன் ஆதித்யா பாஸ்கருடன் நடித்தும் இருக்கிறார்.
மனைவி சிம்ரன், ஒரு மகன், இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் கவுதம் மேனன். வயதுக்கு வராத இவரது இரண்டாவது மகளை சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். போலிசிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடும் எனத் தவிக்கிறது அந்தக் குடும்பம். மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது யார் என்பதை எப்படி கண்டுபிடித்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
தந்தையான கவுதம் மேனன் எந்தப் பதற்றமும் இல்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். சிம்ரனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலம். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மகனாக வரும் ஆதித்யா பாஸ்கர் துணிச்சலாக நடித்துள்ளார். மகள்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நான்காவது கதை 'ஓர் இரவு'. இதை வெற்றி மாறன் இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, ஹரிகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். வேற்று சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சாய் பல்லவி கணவருடன் பெங்களூரில் வசிக்கிறார்.
மகளின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் ராஜ், மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் மனம்மாறி பெங்களூருக்கு பார்க்கச் செல்கிறார்.
மகளுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்ததும் பாச மழை பொழிகிறார் சாய் பல்லவி.
இவ்வாறு மகிழ்ச்சியாக செல்லும் கதையில் சாதி வெறி பிடித்த பிரகாஷ் ராஜ் ஓர் அதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
வெற்றிமாறன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆணவக் கொலையை வெளிப்படையாக காண்பித்திருக்கிறார்கள். பார்க்கும்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவியின் தந்தை - மகள் பாசம் பார்ப்போரை நெகிழ வைக்கின்றது. இறுதியில் பிரகாஷ் ராஜ் செய்யும் வேலைகளைப் பார்க்க மனதில் தைரியம் வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலவிதமான விமர்சனங்களைக் கூறி வருகின்றனர்.
ஒரு சிலர், "ஆணவக் கொலைகளை மையமாக வைத்து நான்கு திறமையான இயக்குநர்களும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆணவக்கொலையின் பயங்கரத்தை சொன்னவர்கள் அதற்கான தீர்வைச் சொல்லாதது வருத்தம்," என்றனர்.
ஒரு சிலர், "திரையரங்கில் வெளியிடப்படும் படங்களுக்கு தணிக்கை உண்டு. கதைகள், காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. ஆனால், 'ஓடிடி' தளங்களில் எந்தவிதமான தணிக்கையும் இல்லாத காரணத்தால் தாங்கள் நினைப்பதை படங்களாக எடுப்பது ஆபத்தில்கூட முடிவடையலாம்," என்றனர்.
"நகரங்களைக் காட்டிலும் கிராமத்தில்தான் சாதி ஆதிக்கமும் ஆணவமும் அதிகமாக இருக்கிறது என்பதனை இந்தத் திரைப்படம் பேசினாலும் 'ஓடிடி' தளங்களில் இத்திரைப்படங்கள் வெளியிடப்படுவதால் திரையரங்கில் பார்க்கும் கிராம மக்களிடம் எந்தளவுக்கு சென்று சேரும் என்பதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எனினும் இதுபோன்ற சாதிமத சமூகப் பிரச்சினைகளைப் பேசும் திரைப் படங்கள் எந்தத் தளத்தில் வெளியானாலும் அவை வரவேற்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது," என்கின்றனர் ஒரு சிலர்.

