விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பது தமது நீண்ட நாள் ஆசை என்கிறார் ஸ்மிருதி வெங்கட்.
'மூக்குத்தி அம்மன்' படத்துக்குப் பிறகு தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்.
எம்ஏ பட்ட மேற்படிப்பை முடித்திருப்பவர் அதற்கு சம்பந்தமில்லாத துறையில் கால் பதிப்போம் என எதிர்பார்க்கவில்லை என்றும் சினிமா துறையில் ஈடுபட்ட பிறகு அதன் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறார்.
"நான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்புக் கிடைத்தாலும் தயக்கமில்லாமல் ஒப்புக்கொள்வேன். அவரைப் போன்று யதார்த்தமாகவும் ரசிக்கும்படியும் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல," என்று பாராட்டுகிறார் ஸ்மிருதி.
ஊரடங்கின்போது தொடக்கத்தில் எப்படி பொழுதைக் கழிப்பது என்று தெரியாமல் விழித்தவர் பிறகு தமக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்பதற்கு அதிக நேரம் ஒதுக்கியதாகக் கூறுகிறார்.
இயற்கையை ரசிப்பது என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்வாராம். ஆனால், கொரோனா விவகாரத்தால் வீட்டிற்குள் முடக்கிவிட்டதாகப் புலம்புகிறார்.
"ஆனாலும், கொரோனா புண்ணியத்தில் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட வாய்ப்புக் கிடைத்தது. வீட்டில் என் பாட்டி, அக்கா குழந்தைகளுடன் நேரம் செலவிட்டேன். தினமும் ரகளையாகப் பொழுது கழிந்தது. கூடவே ஓவியம் தீட்டுவது, தோட்டப் பராமரிப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன்."
காதல் அனுபவம் உண்டா?
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான்கைந்து பேர் என்னைக் காதலிப்பதாகக் கூறியுள்ளனர். 'மூக்குத்தி அம்மன்' வெளியான பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. என் வருங்காலக் கணவர் உயரமானவராக உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவராக இருக்கவேண்டும். அதைவிட என்னுடைய அறிவை அதிகப்படுத்துபவராகவும் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.
"எனது பூர்வீகம் திருநெல்வேலி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ரொம்ப ஜாலியாக, இயல்பாகப் பேசிப் பழகக் கூடியவள். சில சமயங்களில் சட்டென கோபப்பட்டு விடுவேன். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தக் கோபம் மறைந்துவிடும்.
"எனது இந்த இயல்பையும் ஏற்றுக்கொண்டு அனு சரித்துப் போகும் ஒருவர்தான் எனக்கு கணவராக அமைய வேண்டும்," என்கிறார் ஸ்மிருதி வெங்கட்.

