ரசிகர்களைச் சந்திக்க 'மாஸ்டர்' முழுவீச்சில் தயாராகிவிட்ட நிலையில் அப்படம் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' படத்தைப் பார்த்த பிறகே விஜய் இவரைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுவது சரியல்ல என்றும் அப்படம் வெளியாவதற்கு முன்பே 'தளபதி 64' படத்துக்குத் தாம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெளிவுபடுத்தி உள்ளார்.
"விஜய் சார் புது இயக்குநர்களிடம் கதை கேட்பதாக எனக்குத் தகவல் கிடைத்தபோது, 'கைதி' படப்பிடிப்பில் இருந்தேன். அத்தகவல் உண்மைதானா என விஜய் சாரின் மேலாளர் ஜெகதீஷைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் அதை உறுதிப்படுத்தினார். அடுத்த இரு தினங்களில் விஜய் சாரை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.
"அந்த நேரத்தில் விஜய் சாருக்காக உருவாக்கிய கதையை ஒரு வரியில் மட்டுமே அவரிடம் விவரிக்க முடிவு செய்தேன். அவருக்குப் பிடித்திருந்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
"ஆனால், அவர் அரை மணி நேரம் என்னோடு பேசினார். அதற்குள் நான் அவரிடம் சொல்ல நினைத்த அனைத்தையும் முழுமையாக விவரித்துவிட்டேன். 'இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். இந்தக் கதை என் மனதுக்குள் ஓடுகிறதா என்று பார்க்கிறேன்' என்றார் விஜய் சார். இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினேன்.
"ஆனால் மறுநாளே மேலாளர் ஜெகதீஷ் தொடர்பு கொண்டு 'தளபதி 64 படத்தின் இயக்குநர் நீங்கள்தான்' என்றார். இப்படி சற்றும் எதிர்பாராத நிலையில் அமைந்ததுதான் 'மாஸ்டர்' பட வாய்ப்பு," என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
கதை விவாதம் தொடங்கிய போதே விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். அப்போது இவரது நண்பர் சதீஷ்தான் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்கக் கேட்கலாமே எனும் யோசனையையும் முன்வைத்தாராம்.
சேதுபதியை எப்படி அணுகுவது என்று லோகேஷ் யோசித்தபோது சதீஷ்தான் அந்த வேலையைச் செய்திருக்கிறார். இதையடுத்து ஒரு நாள் விஜய் சேதுபதியே லோகேஷைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
"'என்னிடம் பேசுவதில் உனக்கு என்ன தயக்கம்? நீயே அழைத்திருக்கலாமே. உன் கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்கத் தயார்,' என்று சேதுபதி அண்ணன் சொன்னார்.
"அதன் பிறகு விஜய் சாரிடம் என் எண்ணத்தைச் சொன்னேன். நாயகனாக நடித்து வருபவர் வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்று விஜய் சாருக்கும் சந்தேகம். ஆனால் எல்லாம் நல்லவிதமாக அமைந்தது.
"இருவரும் இணைந்து நடித்த காட்சிகளை 18 நாட்கள்தான் படமாக்கினோம். அதற்குள் இருவரும் நெருக்கமாகிவிட்டனர். படப்பிடிப்பின்போது இருவரும் தங்களுக்கான கேரவன் வாகனத்தைப் பயன்படுத்தவே இல்லை. ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். இருவரும் மிக நெருக்கமாகிவிட்டனர் என்பதற்கான சாட்சிதான் விஜய் சாருக்கு சேதுபதி அண்ணன் முத்தம் கொடுக்கும் அந்தப் புகைப்படம்," என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
கொரோனா விவகாரத்தால் 'மாஸ்டர்' வெளியீடு தாமதமானபோது படக்குழுவினர் மிகவும் சோர்ந்து போனார்களாம். அச்சமயம் விஜய்யும் அவரது ரசிகர்களும்தான் ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
"எக்காரணத்தை முன்னிட்டும் 'மாஸ்டர்' படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். விஜய் சாரும் அவ்வப்போது தொடர்பு கொண்டு, 'நம் குழுவினரைத் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். எப்போது திரை கண்டாலும் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்' என்று கூறுவார். விஜய் சாரின் வெற்றிப் படங்களுக்கான பட்டியலில் இதுவும் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை," என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

