நடிகர் அஜித், தனுஷ், நடிகை ஜோதிகா ஆகிய மூவருக்கும் 2020ஆம் ஆண்டுக்கான 'தாதா சாகேப் பால்கே' தென்னிந்திய சினிமா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் சிறந்த படமாக 'டூலெட்' தேர்வாகி உள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்படுகின்றன.
திறமை வாய்ந்த கலைஞர்களுக்கும் சிறந்த படைப்புகளுக்கும் வழங்கப்படும் இந்த விருதுகளைப் பெறுவது பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை 'டூலெட்' பெற்றுள்ளது. 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தனுசுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித்குமாருக்கு சிறப்பு விருதை வழங்கியுள்ளனர்.
'ராட்சசி' படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜோதிகா சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் ஆர். பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுத் தந்துள்ளது. சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வாகி உள்ளார்.
இதேபோல் பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் விருது மலையாளத்தில் மோகன்லாலுக்கும், தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சிறந்த நடிகையாக பார்வதியும், தெலுங்கில் ராஷ்மிகா மந்தனாவும் கன்னடத்தில் தான்யா ஹோப்பும் தேர்வாகி உள்ளனர்.
மலையாளத்தில் சிறந்த நடிகராக சுராஜ், தெலுங்கில் நவீன் பாலி ஷெட்டி, கன்னடத்தில் ராஷித் ஷெட்டி ஆகிய மூவரும் விருதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மலையாளத்தில் தீபக் தேவ் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார். தெலுங்குத் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர் விருது எஸ். தாமனுக்குக் கிடைத்துள்ளது.
விருது வென்றவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்களும் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகமாக உள்ளது. ஜோதிகாவுக்கு சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

