காதல் என்பது ஓர் அனுபவம்தான். அந்த அனுபவம் நமக்குப் புரிய வேண்டுமென்றால், அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். அதனால் மனம் துள்ளுமா, சிறகு விரிக்குமா, கவிதை பேசுமா, கனவு பெருகுமா என அனுபவித்துப் பார்த்தாலே புரியும்," என்று காதலுடன் பேசுகிறார் நடிகர் சாந்தனு.
காதல் என்பது பேசுகிற விஷயமில்லை. அது உணரக் கூடியது என்றும் நம்மை கனவுலகில் நிறுத்தி அழகு பார்க்கும் என்றும் தத்துவார்த்தமாகவும் பேசுகிறார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் நட்சத்திர காதல் ஜோடிகளில் சாந்தனு, கீர்த்தனா ஜோடிக்கும் நிச்சயம் இடமுண்டு. இனி சாந்தனு தனது காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்து சொல்வதைக் கேட்போம்.
"நான் நடிக்க வந்த புதிதில் சினிமா துறையில் கண்டிப்பாக நடனமும் சண்டைப் பயிற்சியும் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள். சண்டைப் பயிற்சிக்கு பவர் பாண்டியன் சாரும் நடனத்திற்கு ஜெயந்தி மேடமும்தான் இருந்தார்கள்.
"விக்ரம், ஆர்யா, சூர்யா, விஷால், குஷ்பு அக்கா என அத்தனை பேரும் இவர்களிடம்தான் பயிற்சி பெற்றனர். ஒரு சினிமாவில் நடித்து விட்டு நடனமே உயிராக இருந்த ஜெயந்தி மேடத்தின் மகள்தான் என் மனைவி கீர்த்தி.
"பள்ளியில் தொடங்கியது எங்கள் நட்பு. எங்கே போனாலும் கீர்த்தி தட்டுப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். பார்த்த நிமிடத்திலேயே பழைய நட்பை அப்படியே பற்றிக் கொள்கிற தினுசுதான் எங்கள் அன்பு. அப்படியே நகர்ந்துபோய் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது மறுபடியும் பேசினோம். அடுத்து அர்த்தம் புரியாத ஒரு சண்டையால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது," என்கிறார் சாந்தனு.
பிறகு கீர்த்தி 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இவர் சினிமாவில் கவனம் செலுத்தி உள்ளார். இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் சாந்தனு பங்கேற்க, அவருடன் இணைந்து நடனமாடி உள்ளார்.
முதலில் நடனமாட மறுத்து, பிறகுதான் ஒப்புக் கொண்டாராம் கீர்த்தி. அப்போதுதான் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர்.
"உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் இணையை மிகவும் விரும்பினார்கள். மறுபடியும் மனதில் காதல் மேலோங்கியது. அது பின்னர் திருமணத்தில் முடிந்தது," என்கிறார் சாந்தனு.
திரையுலகத்துடன் தொடர்பு உள்ளவரை காதலிக்கவோ மணக்கவோ கூடாது என்று முடிவு எடுத்திருந்தாராம் கீர்த்தி.
ஆனால் சாந்தனுவின் அன்பு தன் மனதை மாற்றியது என்கிறார்.
"பள்ளி நாட்களில் இருந்தே அவர் என் மீது அன்பு செலுத்தி வருகிறார். அவரைப் பிரிந்து வாழ முடியாது என்பதை உணர்ந்ததும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டேன். இந்த முடிவை நான் எடுத்த தருணத்தை மறக்க இயலாது," என்கிறார் கீர்த்தி.
"காதலின் அருகாமை, நேசம், நினைவுகள் எல்லாமே கல்லெறிந்த குளம் மாதிரி அப்படியே மனதில் உறைந்திருக்கிறது. இதை சாத்தியமாக்கியது என் மனைவி கீர்த்தி," என்று பூரிப்புடன் குறிப்பிடுகிறார் சாந்தனு.

