‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்காக சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கிடக்கின்றனர்.
தன் உடல் எடையைக் குறைத்ததுடன் கடுமையாக உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறார் சிம்பு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை வைத்துப் படம் இயக்க விரும்பும் இயக்குநர்களின் பட்டியலில் புதுப்பெயர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன.
தற்போது ‘மாநாடு’ படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பவர் அடுத்து ‘மஃப்டி’ கன்னட படத்தின் மறுபதிப்பான ‘10 தல’ படத்தில் நடிக்க உள்ளார்.
இவையும் முடிந்தபிறகு அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பின்போது சுசீந்திரன் பணியாற்றிய விதம் சிம்புவை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எனவே அவரது இயக்கத்திலேயே மீண்டும் ஒரு படத்தில் நடிப்பது என முடிவு செயச்துள்ளாராம்.
அவரது விருப்பத்தை அறிந்து ஒரு கதையை சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். விவசாயத்தையும் அரசியலையும் விரிவாக அலசி ஆராயும் கதைக்களம் சிம்புவுக்கு மிகவும் பிடித்துப் போனதாகத் தகவல்.
இந்நிலையில் இயக்குநர் ராம் தனது அடுத்த படத்தில் நடிக்கக் கேட்டு சிம்புவை அணுகியுள்ளார். அவர் கூறிய இரண்டு கதைகளுமே சிம்புவுக்குப் பிடித்திருப்பதாகத் தகவல்.
சமூகப் பிரச்சினைகளை அலசும் கதை, பயணத்தை மையப்படுத்திய கதை என ராம் கூறியதில் இரண்டாவதுதான் சிம்புவின் தேர்வாக உள்ளது. பத்திரிகை ஒன்றில் வெளியான ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளாராம் ராம்.
இந்தப் பயணக் கதையில் முதல் காட்சியில் இருந்து இறுதி வரை நாயகனுடன் பயணிக்கும் வகையில் நாயகியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு படம் முழுவதும் வரும் நாயகியாக நடிப்பவர் மிகுந்த திறமைசாலியாக ரசிகர்களைக் கவரக்கூடியவராக இருக்க வேண்டியது அவசியம்.
இதை மனதிற்கொண்டு நயன்தாராவைத் தேர்வு செய்துள்ளாராம் இயக்குநர் ராம். சிம்புவுக்கும் இது தெரியும். மேலும் சில விஷயங்கள் உறுதியான பிறகே சிம்பு இப்படத்தில் நடிப்பது நூறு விழுக்காடு உறுதியாகுமாம்.
எல்லாம் சரியான கோணத்தில் நகரும் பட்சத்தில் ‘வல்லவன்’, ‘இது நம்ம ஆளு’ படங்களுக்குப் பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இந்நிலையில் ‘மாநாடு’ படத்தில் சிம்பு ஒரு பாடலைப் பாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘ஈஸ்வரன்’ வெளியீட்டுக்குப் பிறகு பாடுவது குறித்த தகவல் முதலில் வெளியாகும் என்றும் அதன் பிறகு பாடலை வெளியிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல். பல இயக்குநர்கள் முற்றுகையிட்ட போதிலும், சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தவில்லையாம். இதுவும் தயாரிப்பாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சிம்பு. அடுத்த படத்தில் அவரது வழக்கமான இளமை துள்ளும் நடனக் காட்சிகள் இடம்பெறுமாம்.