நாயகியாக இருந்தபோதும் சரி, திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போதும் சரி, சிம்ரன் திரையில் தோன்றினால் தனி வரவேற்புதான்.
‘பேட்ட’யில் ரஜினியுடன் நடித்தவர் அடுத்து ‘பாவக்கதைகள்’, மாதவன் இயக்கத்தில் ‘ராக்கெட்ரி’, ‘அந்தாதூன்’ இந்திப்படத்தின் தமிழ் மறுபதிப்பு என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் தம்மைப் படமெடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார் சிம்ரன்.
அதைக்கண்டு பலரும் நன்றாக இயல்பாக இருப்பதாக பின்னூட்டமிட்டுள்ளனர்.
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து நடிக்கிறேன்.
“பிரசாந்த் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கும். அதனாலும் நல்ல கதாபாத்திரம் என்பதாலும் மறுபதிப்பில் நடிக்கிறேன்.
“தற்போது ‘பாவக்கதைகள்’ படத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக நடித்திருக்கிறேன். அதில் என் நடிப்பு மிக இயல்பாக இருந்ததாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்குப் பெண் குழந்தை இல்லை.
“ஆனால் என் தங்கை, தம்பி, நெருக்கமான உறவினர்களின் வீடுகளில் பெண் குழந்தைகள் உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் எங்கள் வீடு முழுக்கவே பெண் குழந்தைகள்தான். ஒருவேளை எனது நடிப்பு இயல்பாக அமைந்ததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்,” என்கிறார் சிம்ரன்.
திருமணமான நடிகைகளை திரைஉலகம் புறக்கணிப்பதாக கூறப்படுவதைத் தம்மால் ஏற்கமுடியாது என்று சொல்பவர், சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் தன்னைப் போலவே மற்ற நடிகைகளும் தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார்.
“நான் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களிலேயே அம்மாவாக நடித்துவிட்டேன். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் நான் திரையுலகில் இருந்து ஒதுங்கவில்லை.
“எனக்கான கதாபாத்திரங்களுக்காக காத்திருந்தேன். அதற்காக விஜய்க்கு ஜோடியாக நடிக்கச் சொன்னால் அதற்கு வாய்ப்பில்லை. நல்ல கதாபாத்திரங்களே எனது இலக்கு, எதிர்பார்ப்பு,” என்கிறார் சிம்ரன்.