படப்பிடிப்பின் போது நடிகை நமீதா கிணற்றில் விழுந்ததைப் பார்த்து பதறிப்போன கிராம மக்கள் அவரை காப்பாற்ற ஓடிய சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்கும் படம் ‘பெளவ் வெளவ்’. இதில் நமீதா நாயகியாக நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பை பார்க்க அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்துள்ளனர்.
அப்போது ஒரு கிணற்றின் அருகில் நமீதா நடந்து சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த கைபேசி கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. உடனே பதற்றத்தில் அதை தாவிப் பிடிக்க முயன்ற நமீதா கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதைக் கண்டு பதறிப்போன கிராம மக்கள் உடனடியாக நமீதாவைக் காப்பாற்ற கிணற்றின் அருகே ஓடியுள்ளனர். ஆனால் படக்குழுவினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் வாக்குவாதம் மூண்டுள்ளது. பிறகுதான் நமீதா கிணற்றில் விழுந்ததும் படப்பிடிப்பின் ஓர் அங்கம் எனத் தெரிய வந்துள்ளது. அது படத்தின் ஒரு காட்சி என்பதை பொதுமக்களுக்கு புரியவைத்து படக்குழுவினர் அனுப்பி வைத்துள்ளனர்.