'மாஸ்டர்' படம் குறித்து ஒவ்வொரு நாளும் பலவிதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானாலும்கூட படக்குழுவினர் மத்தியில் உற்சாகம் குறைந்துவிடவில்லை. படத்துக்கான விளம்பரப் பணிகளில் பரபரப்பாக உள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் இருந்தபடி தமிழ் சினிமா ரசிகர்களுடன் இணையம் வழி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார் 'மாஸ்டர்' நாயகி மாளவிகா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார்.
'மாஸ்டர்' படத்தைப் பார்த்து விட்டீர்களா. அதன் கதை என்ன என்பதுதான் பெரும்பாலானவர்கள் எழுப்பிய கேள்வி. அதற்குப் பதிலளிக்க மாளவிகா தயங்கவில்லை.
"நான் இன்னும் படம் பார்க்கவில்லை என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. மும்பையில் இருந்ததால் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நானும் இந்தப் படத்தில் ஓர் அங்கம் என்ற வகையில் மிகச்சிறந்த விருந்து ஒன்று ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என்று உறுதிபடச் சொல்வேன்," என்கிறார் மாளவிகா.
கதைப்படி மதுப் பழக்கத்துக்கு அடிமையான பேராசிரியராக விஜய்யும் அவரது உதவியாளராகப் பணியாற்றும் இளம் பேராசிரியையாக மாளவிகாவும் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளதாகத் தகவல்.
விஜய்யை 'மாஸ்டர்' பட பூசையின்போதுதான் முதலில் சந்தித்தாராம். அதன்பிறகு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததாகச் சொல்கிறார். இவரை 'மல்லு' என்றுதான் பாசத்துடன் அழைப்பாராம் விஜய்.
அடிப்படையில் மலையாளியான மாளவிகா குடும்பத்துடன் மும்பையில் வசிக்கிறார்.
மலையாளக் குடும்பங்களில் குழந்தைகளை மல்லு என்று பாசத்துடன் குறிப்பிடுவது வழக்கம்.
"விஜய் சாரை சந்தித்தது குறித்து அவரது பிறந்த நாளன்றுகூட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தேன்.
"அவர் ஒரு தயிர்சாதப் பிரியர். அதை விரும்பிச் சாப்பிடுவார். தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவார். காரணம் அவர் தினமும் இரவு வெகு சீக்கிரமாகத் தூங்கச் சென்றுவிடுவார்.
"குறைவாகப் பேசுவார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார். அவரைப் பார்த்த முதல் நாளன்று மனதில் என்ன எண்ணம் அவரைப் பற்றி ஏற்பட்டதோ அதன்படியே இன்றளவும் காட்சி அளிக்கிறார், செயல்படுகிறார். இது பெரிய விஷயம்," என்கிறார் மாளவிகா.

