மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து சினிமா ரசிகர்களும் கோடம்பாக்கத்தினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயனும் அதே உற்சாகத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார்.
முன்னணி நாயகன், தயாரிப்பாளர், பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பல்வேறு விதமாக தன்னை வெளிப்படுத்தியவர் இன்றளவும் 'மக்களை மகிழ்விக்கும் கலைஞர்' எனும் அடையாளத்தையே தாம் பெரிதும் விரும்புவதாகச் சொல்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சரியாக பொங்கலை ஒட்டி வெளியீடு கண்டது சிவாவின் 'ரஜினி முருகன்' படம். அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.
அதே போன்று 'டாக்டர்' படத்தையும் பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் கொ ரோனா விவகாரத்தால் எல்லாம் தலைகீழாகி விட்டது.
'டாக்டர்' படத்தின் இயக்குநர் நெல்சனை அண்ணா என்றுதான் பாசத்துடன் குறிப்பிடுகிறார் சிவா. நெல்சனின் முதல் படத்தை சிவாதான் தயாரிக்க இருந்தாராம். அதற்குள் 'கோலமாவு கோகிலா' வாய்ப்பு கிடைத்ததால் திட்டம் மாறிவிட்டது.
"நெல்சன் அண்ணா இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நான் ஏதேனும் ஒரு வகையில் இடம்பெற வேண்டும் என விரும்பினேன். அந்த ஆசைக்கான வடிகாலாகத்தான் 'கல்யாண வயசு' பாடலை எழுதச் சொன்னார்.
"அதுமட்டுமல்ல, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகிய இருவரிடமும் அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நான்தான் கேட்டுக்கொண்டேன். கால்ஷீட், சம்பள விஷயத்தில் இயக்கு நருடன் அனுசரித்துப் போகுமாறு கேட்டுக்கொண்டதை ஒரு கடமையாகவே நினைக்கத் தோன்றியது.
"நான் மட்டுமல்ல நெல்சன் அண்ணாவுக்கு நெருக்கமான பலரும் தங்களால் முடிந்ததைச் செய்தனர். 'கோலமாவு கோகிலா' வெளியானதும் 'டாக்டர்' கதையைச் சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. நெல்சன் அண்ணனும் ஜாலியான அதே சமயம் உணர்வுபூர்வமான படமாக உருவாக்கியுள்ளார்," என்கிறார் சிவா.
நெல்சன், அடுத்து விஜய் படத்தை இயக்கப்போவது தெரியவந்ததும் அவரைவிட சிவாதான் அதிகம் மகிழ்ச்சி அடைந்தாராம். விஜய்க்காக நெல்சன் உருவாக்கி உள்ள கதையின் கரு சிவாவுக்கு நன்கு தெரியுமாம். அந்தக் கதையைத் திரையில் பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
வேற்றுக்கிரகவாசிகளை மையமாக வைத்து உருவாகி வருகிறது சிவாவின் அடுத்த படமான 'அயலான்'. தென்னிந்திய மொழிகளில் இதுவரை வேற்றுக்கிரகவாசிகளை மையமாக வைத்து முழுநீளப் படம் எதுவும் வெளியாகவில்லை என சுட்டிக் காட்டுகிறார். இந்தியில் ஒரு படத்தில் வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரத்தைக் காட்டியிருந்தாலும், அதிலும் ஒரு நடிகர்தான் வேற்றுக்கிரகவாசி போல் ஒப்பனையுடன் நடித்திருப்பதாகச் சொல்கிறார்.
"தமிழில் உருவாகும் 'அயலான்' படத்தில் 'கிராஃபிக்ஸ்' தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம். அது படம் முழுவதும் என்னுடன் பயணிக்கும்.
"படப்பிடிப்பைவிட தொழில்நுட்பப் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படும். கிட்டத்தட்ட 2500 'ஷாட்'கள் கிராஃபிக்ஸ் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு தாமதமானாலும் இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்," என்று உற்சாகத்துடன் விவரிக்கிறார் சிவா.
தனது படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதைப் பெரிய விஷயமாக கருதுவதாகச் சொல்பவர், ரகுமான் இசையமைக்க சம்மதித்ததும் பெரிதாக சாதித்துவிட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டதாக சொல்கிறார்.
"ரகுமான் சார் பாடல்கள் அடங்கிய ஒலிநாடாவை வாங்குவதற்காக சிறுவயதில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்திருக்கிறேன். இன்று அவர் என் படத்துக்கு இசையமைப்பது பெருமையாக இருக்கிறது.
"இதேபோன்ற உணர்வுதான் 'ரெமோ' படத்தில் என் நடிப்பு சிறப்பாக இருப்பதாக ரஜினி சார் தொலைபேசியில் பாராட்டியபோதும் ஏற்பட்டது. மக்கள் நமக்குக் கொடுத்த இடத்தை சரியாகப் பயன்படுத்தி உள்ளோம். அதனால்தான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்," என்று சொல்லும் சிவாவை அவரது தந்தையின் மறைவுதான் அதிகம் பாதித்துள்ளது.
அவரது இழப்பை எதைக்கொண்டும் ஈடுகட்ட முடியாது. அவரது ஆசிதான் தம்மை வழிநடத்துவதாகச் சொல்கிறார்.

