‘மாஸ்டர்’ படத்தின் வசூல் விஜய்யின் மற்ற வெற்றிப் படங்களுக்கு நிகராக இருப்பதாக தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’ உள்ளிட்ட விஜய் படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளன. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படமும் அந்தப் பட்டியலில் இணைகிறது. அதேசமயம் படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், விமர்சனங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
‘மாஸ்டர்’ படத்தை திருப்பூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து பார்த்தார் லோகேஷ். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மாஸ்டர்’ படம் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றார்.
“விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு உள்ளது. அடுத்த படத்தில் எதிர்மறை விமர்சனங்கள் எழாத அளவிற்கு கவனமாக இருப்பேன். அனைத்துத் தரப்பிற்கும் படம் பிடித்திருப்பதால்தான் திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
“விமர்சனங்கள் என்பன நேர்மறையாகத்தான் இருக்கவேண்டும் எனும் அவசியமில்லை. படம் நீளமாக இருப்பதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர். அது உண்மைதான். இரண்டு பெரிய நாயகர்களைத் திரையில் காட்டவேண்டி இருந்ததால் படம் நீளமாக அமைந்துவிட்டது,” என்றார் லோகேஷ். முன்னதாக ‘மாஸ்டர்’ படத்தின் நீளம் அதிகமாக உள்ளது என்றும் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், இது விஜய் படம்தான் என்றும் விஜய் சேதுபதியின் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.