'ஈஸ்வரன்' துணையோடு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி உள்ளார் சிலம்பரசன். படத்தின் வசூல் தயாரிப்புத் தரப்புக்குத் திருப்தி அளித்துள்ளதாம். இதையடுத்து இயக்குநர் சுசீந்திரனும் சிம்புவும் மீண்டும் இணைய உள்ளனர்.
"இந்தப் படத்தின் கதையை சிம்புவுக்கு 45 நிமிடங்களில் முழுமையாக விவரித்தேன். அதை ரசித்துக் கேட்டவர் 'கதை மனதில் நேர்மறை சிந்தனையை விதைக்கிறது. நாம் கண்டிப்பாக செய்வோம் என்று உற்சாகமாக சொன்னார்.
"பட வேலைகளைத் தொடங்கிய நிலையில் சிம்பு ஏற்கெனவே 'மாநாடு', 'பத்து தல' என வரிசையாகப் படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவாரா என்பது சந்தேகம்தான் என்று ஒருசிலர் என்னிடம் கூறினர். நானும்கூட கொஞ்சம் பயந்து போனேன். இதுகுறித்து சிம்புவிடம் வெளிப்படையாக கேட்டுவிட்டேன்.
"அவர், 'யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள். உங்களை சகோதரராக நினைத்துச் சொல்கிறேன். ஒப்புக்கொண்டபடி படப்பிடிப்புக்கு வருவேன். நடித்துக் கொடுப்பேன்' என்றார் சிம்பு. சொன்னபடியே தன் வாக்கைக் காப்பாற்றினார்.
"சில காட்சிகளைப் படமாக்கியபோது சற்றே நேரம் எடுக்கும் என்று நினைத்திருப்பேன். ஆனால், நான் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக அவற்றைப் படமாக்கினோம். அதற்கு சிம்புவும் ஒளிப்பதிவாளர் திருவும்தான் முக்கிய காரணம்," என்கிறார் சுசீந்திரன்.
படக்குழுவில் இருந்த அனைவரிடமும் சிம்பு இயல்பாகப் பேசிப் பழகினாராம். இதனால் படக்குழுவினர் அவரை வெகுவாக மெச்சுகிறார்கள். இதுவரை சிம்பு படங்களில் ஏற்கெனவே அவருடன் நடித்தவர்கள்தான் மீண்டும் மீண்டும் இடம்பெறுவார்கள். அந்த வழக்கத்தை மாற்றி அமைத்திருக்கிறது 'ஈஸ்வரன்'. படத்தின் நாயகி நிதி அகர்வாலும் படப்பிடிப்பின்போது வெகுவாக ஒத்துழைத்தாராம்.
"நிதி அகர்வால் தொழில் பக்தி நிறைந்த கதாநாயகி. சில நாயகிகள் கேரவனுக்குள் நுழைந்தால் மீண்டும் இறங்கி வரவே ஒரு மணி நேரமாகும்.
"ஆனால் நிதி அப்படிப்பட்டவர் அல்ல. ஓய்வெடுக்கப் போகவே மாட்டார். அப்படியே கேரவனுக்குச் சென்றாலும் நாம் எதிர்பார்த்த நேரத்துக்குள் வந்து நிற்பார். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நாயகிகளுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும்
"படப்பிடிப்பின் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணி வரை காட்சிகளைப் படமாக்க வேண்டி இருந்தது. மறுநாள் காலை உதயநிதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நிதி அகர்வால் பங்கேற்க வேண்டும்.
"ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியை எடுக்கப் போவதாக நான் கூறியதும் உடனடியாக தனது விமானப் பயணத்தை ரத்து செய்துவிட்டு இரவு 10 மணி வரை நடித்துக்கொடுத்தார் நிதி அகர்வால்.
"அதேபோல் மற்றொரு நாயகியான நந்திதாவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். நன்றாகத் தமிழ் பேசக்கூடிய நடிகை அவர். கனமான கதாபாத்திரங்களிலும்கூட அவரால் சிறப்பாக நடிக்க முடியும். மொத்தத்தில் நல்ல குழு அமைந்ததால் 'ஈஸ்வரன்' சிறப்பான படைப்பாக உருவாகியுள்ளது. விரைவில் இந்தக் குழு மீண்டும் ஒரு படத்துக்காக இணையும்," என்கிறார் சுசீந்திரன்.

