‘யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.
‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை ‘இருட்டு’ படத்தை அடுத்து இதை இயக்கியுள்ளார்.
இதில் அமீர் ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைக்க, ஒளிப்பதிவுக்கு கிருஷ்ணசாமி பொறுப்பேற்றுள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற பாடலை பாடியிருக்கிறார்.
மிகுந்த பொருட் செலவில், நடப்பு அரசியல் பின்னணியில், காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது ‘நாற்காலி’.
படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் மாதம் இப்படம் திரைகாண்கிறது.