இந்தியில் அறிமுகமாகி பிறகு தெலுங்கில் கால் பதித்து இப்போது வெற்றிகரமாக கோடம்பாக்கத்துக்கும் வந்துள்ளார் இளம் நாயகி நிதி அகர்வால்.
'ஈஸ்வரன்', 'பூமி' என இவரது நடிப்பில் ஒரே சமயத்தில் இரு படங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் சுமாராக பேசும் நிதி, தற்போது வேகமாக தமிழ் கற்று வருகிறாராம். அடுத்த படத்தில் தம்மால் சொந்தக் குரலில் பேசமுடியும் என்கிறார்.
'பூமி' படத்துக்காக மதுரையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றபோது கிராம மக்கள் பாசத்தைக் கொட்டியதாகச் சொல்கிறார்.
"தினமும் விதவிதமாக சமைத்துக்கொண்டு வந்தனர். அவர்களின் அன்பு என்னைத் திக்குமுக்காட வைத்தது. எதிர்காலத்தில் நிறைய சம்பாதித்து, விளை நிலங்களை வாங்கி இயற்கை விவசாயம் செய்யவேண்டும் எனும் ஆசை மனதில் வலுத்து வருகிறது. எனது நிலத்தில் விளைவதை மட்டுமே சாப்பிட்டு வாழவேண்டும் எனும் ஆசையும் துளிர்விட்டிருக்கிறது," என்கிறார் நிதி.
மதுரை ரசிகர்கள் இவரைச் 'செல்லக்குட்டி' என்று பாசத்துடன் கொஞ்சுகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒருசிலர் இணைந்து நிதி பெயரில் ரசிகர் மன்றமும் தொடங்கி உள்ளனராம்.
இதைக் கேள்விப்பட்டபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்கிறார். இப்போது கிராமத்து வாழ்க்கை மீதும் ஆசை வந்திருக்கிறதாம்.
'ஈஸ்வரன்', 'பூமி' படங்களுக்காக மதுரை, பொள்ளாச்சி பகுதி கிராமங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகள்தான் நிதி மனதில் இந்த ஆசையை விதைத்துள்ளது. பிற நடிகைகளைப்போல் தாம் நடிக்க வந்தது விபத்து என்று இவர் சொல்வதில்லை. திட்டமிட்டுதான் நடிகையானாராம்.
"சிறு வயதிலேயே எனக்கு சினிமா மீதான ஆர்வம் அதிகம் இருந்தது. பள்ளி நாட்களில் பிரபல திரைப்பாடல்களுக்கு நடனமாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். யாரேனும் என்னிடம், 'நீ என்னவாகப் போகிறாய்' என்று கேட்டால், 'சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும்' என்றுதான் சொல்வேன். என் ஆர்வத்தைக் கவனித்த அம்மா முறைப்படி நடனம் கற்றுக்கொள்ள வைத்தார்.
"12ஆம் வகுப்பு படித்தபோது சினிமா மீதான ஆர்வம் சற்றே குறைந்திருந்தது. பிறகு பெங்களூருவில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோது என் கூட்டாளிகள் பலரும் ஐஸ்வர்யா ராய் போல்அழகாய் இருக்கிறாய் என்று உசுப்பேற்றிவிட்டனர்.
"ஒருமுறை பெரிய விளம்பரப் பதாகையில் ஐஸ்வர்யா ராயின் முகத்தை பிரம்மாண்டமாக பார்த்தபோது சினிமா ஆசை பெரிதானது. நமது முகமும் இதுபோன்று விளம்பரப் பலகைகளில் வெளிவர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்," என்கிறார் நிதி.
நடிகையாகும் ஆசை மனதில் வலுத்ததும், அதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் சரளமாகப் பேசுகிறார்.
"அதன் பலனாக முதலில் இந்தியில் வாய்ப்பு அமைந்தது. அதன் பின்னர் தெலுங்கு. இப்போது தமிழ். இந்தியில் அறிமுகமாகி மிக வேகமாகவே தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை நானாகத்தான் இருப்பேன்.
"ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவள் நான். பெங்களூருவில் நிறைய பேர் தமிழ் பேசுவார்கள். அதனால், எனக்குத் தமிழ் பரிச்சயமான மொழிதான்.
"தவிர, பொதுமுடக்கக் காலத்தில், அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு தமிழ் கற்கத் தொடங்கினேன். நான் அறிந்துகொண்ட தமிழ் வார்த்தைகளை இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருந்தேன். அந்த வார்த்தைகள் அனைத்தும் பேச்சுவழக்கில் இருப்பதாகப் பலரும் சொன்னார்கள். நிச்சயமாக அடுத்த தமிழ்ப் படத்தில் சொந்தக் குரலிலேயே பேசுவேன்," என்கிறார் நிதி அகர்வால்.
ஜெயம் ரவி, சிம்பு குறித்து?
"இருவருமே நல்ல நண்பர்கள்தான். சினிமாவில் நிறைய அனுபவம் உள்ளவர்கள். நடிப்பில் பிரமிக்க வைத்தனர். புதியவர்களுக்குக் கற்றுத் தருவதிலும் இருவரும் ஆர்வம் செலுத்துகிறார்கள். இப்போது உதயநிதியுடன் நடிக்கிறேன். அவரும் நல்ல நடிகர்," என்று சொல்லும் நிதிக்கு, இப்போதைக்கு நிறைய வணிகப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே முதன்மையான ஆசையாக உள்ளதாம்.

