நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து சர்ச்சைகள் வெடிப்பது வாடிக்கையாகி விட்டது.
அண்மையில்தான் பட்டாக்கத்தி கொண்டு தன் பிறந்தநாள் கேக்கை வெட்டினார் என சர்ச்சை எழுந்தது.
அடுத்து அவர் நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் வில்லன் கதாபாத்திரம் பிரபல அரசியல் தலைவரை சீண்டுவது போல் இருப்பதாக புகார் கிளம்பியது.
இப்போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தலைப்பில் உருவாகும் சேதுபதியின் மற்றொரு படமும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை அண்மையில் வெளியிட்டனர். அதில் இலங்கை தேசியக் கொடியும், சிறிய அளவில் இடம்பெற்றுள்ளது. இதுதான் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சுவரொட்டியை மாற்றி அமைக்கும்படி தமிழ் ஆர்வலர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆனால் விஜய் சேதுபதி தரப்போ படம் வெளியான பிறகு உண்மை விவரங்கள் தெரியவரும், அதுவரை பொறுத்திருங்கள் என்கிறது.
கதைப்படி இலங்கை அகதியாக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி. அங்கிருந்து தமிழகம் வரும் அவர், பின்னர் லண்டன் செல்ல முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது எண்ணம் ஈடேறியதா என்பதுதான் கதையாம்.
இந்தப் படம் வெளிவந்ததும் சேதுபதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இலங்கைத் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அவரைப் பெரிதும் போற்றுவார்கள் என்கிறது படக்குழு.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக இலங்கைத் தமிழில் பேசக் கற்றுக்கொண்டாராம் சேதுபதி. அவரது பேச்சும் உடல்மொழியும் அச்சு அசலாக இலங்கைத் தமிழரைப் பிரதிபலிக்குமாம்.
பின்னணிக் குரல் பதிவின்போது சிறு தவறும் நிகழாதபடியும் செயற்கைத்தனம் இல்லாமலும் கவனமாகப் பார்த்துக் கொண்டாராம்.
இதற்கு முன்பு ‘தெனாலி’ படத்தில் கமல் இலங்கைத் தமிழில் பேசி நடித்திருப்பார். அதன் பிறகு விஜய் சேதுபதிதான் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
“இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் சேதுபதி. அதைப் பலர் புரிந்துகொள்ளவில்லை. ‘800’ திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றனர். அதிலும்கூட ஈழத்தமிழர்களுக்கு எதிராக எதுவும் இல்லை.
“இப்போதும் விவரம் தெரியாமலேயே எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். இந்தப் படம் வெளியான பிறகுதான் இலங்கைத் தமிழர் நலனில் சேதுபதி எந்தளவு அக்கறை கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரியும்,” என்கிறது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படக்குழு.