‘ஈஸ்வரன்’ பட வாய்ப்பு திடீரென தேடி வந்ததாகவும் அதில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்றும் நடிகை நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
சிம்புவைப் பற்றி பலரும் பலவிதமாகப் பேசிவரும் நிலையில் அவரது குணாதிசயத்தை நேரில் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஈஸ்வரன்’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் நந்திதா. சில மாதங்களுக்கு முன் வீட்டில் இருந்தபோது திடீரென இயக்குநர் சுசீந்திரனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாம். தனது படத்தில் நடிக்க விருப்பமா என்று அவர் கேட்க, இவரோ கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
“ரசிகர்களிடம் பெயர் வாங்கிய பிரபல இயக்குநர், இளையர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகர் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிப்பது என இத்தனை சாதகமான அம்சங்கள் இருக்கும்போது யாருக்குத்தான் நடிக்க மனம் வராது? அதனால்தான் கேட்டவுடனேயே நடிக்க சம்மதித்தேன்.
“படப்பிடிப்பு மிக உற்சாகமாக நடந்தது. சுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை நடிகர்களிடம் அதிக வேலை வாங்கமாட்டார். அதேசமயம் காட்சிகள் திருப்தியாக அமையவேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார். பெரும்பாலான காட்சிகள் முதல் டேக்கிலேயே படமாக்கப்பட்டுவிடும்.
“சிம்புவைப் பொறுத்தவரை படப்பிடிப்பின்போது மிக இயல்பான மனிதராகக் காணப்பட்டார். கலகலப்பாகப் பேசி சிரித்தபடி வலம் வருவார். மேலும், படப்பிடிப்பு அரங்கிலிருந்த குழந்தைகளுடன் நாள்தோறும் அரட்டை அடிப்பார். அதுமட்டுமல்ல, அவர்களுக்குத் தினந்தோறும் இனிப்புகள், ஐஸ்கிரீம் என்று ஏதாவது வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பார். படப்பிடிப்புக்கு இடையே அவர் பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வந்ததும் உண்மைதான். இதற்கு என்ன காரணம் என அவரிடமே தயங்காமல் கேட்டுவிட்டேன். அவர் அளித்த விளக்கங்களும் தெரிவித்த சில தகவல்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
“ஒரு நடிகரால் திடீரென இந்தளவுக்கு மாறமுடியுமா என்று வியந்தேன். காரணம் அவரைப் பற்றி நமக்குப் பல விஷயங்கள் முன்பே தெரியும். கடைசியாக நடித்த படங்களில் அவரது தோற்றத்தைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் திடீரென இந்தளவு உடல் இளைத்து புதிதாக நடிக்க வந்த இளைஞரைப் போல் மாறியுள்ளார் என்றால் அதன் பின்னணியில் கடும் உழைப்பு இருக்கிறது,” என்று சிம்புவைப் பற்றிப் பேசும்போது கண்களை அகல விரித்து ஆச்சரியப்படுகிறார் நந்திதா.
தம்மால் அந்தளவுக்குத் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட முடியாது என்று சொல்பவர், இந்தப் புத்தாண்டில் தனது நடிப்பில் பல படங்கள் வெளியீடு காணும் என நம்புகிறாராம். கடந்த காலங்களில் தாம் ஒருதலையாக காதல் வயப்பட்டதாகச் சொல்கிறார் நந்திதா. யார் மீது காதல் வயப்பட்டார் என்பதைத் தெரிவிக்கமாட்டாராம்.
இரவு முழுவதும் நீளும் விருந்து நிகழ்வுகளில் பங்கேற்பது பிடிக்காத விஷயம் என்கிறார்.
நிறைய திகில் படங்களில் நடித்திருப்பவர் இனிமேலும் அப்படிப்பட்ட படவாய்ப்புகள் வந்தால் தயங்காமல் ஏற்பாராம். ஒருமுறை நிஜமாகவே தாம் ஒரு பேயைச் சந்தித்ததாகவும் சொல்கிறார்.
“நான் சொல்வதைச் சிலர் நம்பாமல் போகலாம். அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. ஒருமுறை குடும்பத்தாருடன் ஒரு கோவிலுக்குக் காரில் சென்று கொண்டிருந்தோம்.
“நள்ளிரவில் எல்லோரும் தூங்கிவிட்டனர். ஓட்டுநருடன் யாரேனும் பேசவேண்டும் என்பதால் நான் விழித்திருந்தேன். அப்போது இருள் சூழ்ந்த ஓரிடத்தில் சாலையோரம் ஓர் உருவம் மெல்ல அசைந்தபடி சென்றது. சினிமாவில் காட்டும் பேய், பிசாசுகளைப் போல் இருந்தது. அதைக் கண்டதும் என்னையும் அறியாமல் உரக்கக் கத்தினேன். தூங்கிக்கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து கண் விழித்தனர். என் குடும்பத்தார் கூட என்னை நம்பவில்லை. ஆனால் பேய் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்,” என்று கண்களில் மிரட்சியுடன் சொல்கிறார் நந்திதா ஸ்வேதா.