‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார் ‘கயல்’ ஆனந்தி.
நான்கைந்து படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனந்தியை வைத்து படம் எடுத்துக்கொண்டிருப்பவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
எனினும் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பது தமது கடமை என்றும் தொடர்ந்து நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார் ஆனந்தி.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்கத் துவங்கிவிட்டாராம்.
“கொரோனா அச்சுறுத்தலால் நான் இன்னும் ஹைதராபாத்தில்தான் இருப்பதாக சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள். ‘ராவணக்கோட்டம்’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்றுள்ளேன். அதற்காக அவ்வப்போது சென்னை வந்துபோகிறேன்.
“கொரோனா அச்சுறுத்தல் உச்சத்தில் இருந்த ஜூன், ஜூலை மாதங்களில்கூட முழுப் பாதுகாப்புடன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ஸோம்பி ரெட்டி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். நிறைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்ட படம் அது. அதையே சமாளித்துவிட்டோம். இப்போது எல்லாம் கட்டுக்குள் இருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும்,” என கேள்வி எழுப்புகிறார் ஆனந்தி.
இதுவரை தாம் நடித்த தமிழ்ப் படங்களில் ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ தன் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுபவர், அதில் தனது கதாபாத்திரத்தை மிகவும் நேசித்ததாகச் சொல்கிறார்.
கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண், தகவல் தொழில்நுட்பத் துறை வரை எப்படிப் பயணிக்கிறாள் என்பதுதான் களம்.
“பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தச் சூழலில் என்னைத் தேடி வந்த கதையும் கமலி கதாபாத்திரமும் மனதைக் கவர்ந்தன.
“புதிய குழுவின் முதல் முயற்சி என்றதும் சற்று தயக்கத்துடனே கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கதை கேட்டு முடிக்கும்போது, ‘எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் படத்தை விட்டுவிடக் கூடாது’ என உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்.
“இப்போதைக்கு முழுக் கதையையும் சொல்லிவிட முடியாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் என் மீது படரும். ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து நடித்தேன். படப்பிடிப்பு நடைபெற்ற அந்த நாட்கள் ரொம்பவே ஆனந்தமானவை,” என்கிறார் ஆனந்தி.
‘மூடர் கூடம்’ நவீனுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படம் விரைவில் வெளிவர உள்ளது. அடுத்து இணையத் தொடர்களிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார்.
“நவீன் என்னோட குடும்ப நண்பர் மாதிரி. அவரது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படப்பிடிப்பில் அவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
“மொத்தமாகவே 15 நபர்கள்தான் படப்பிடிப்பில் இருப்போம். ஆனால், நுணுக்கமாக, நேர்த்தியாகப் படப்பிடிப்பு நடந்தது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள படம் இது.
“எனக்குக் காட்சி இல்லாத சமயங்களில் ஒவ்வொரு காட்சியையும் எப்படி, எத்தகைய கேமரா கோணத்தில் படமாக்க வேண்டும்? ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும்? என படக்குழுவினரிடம் கேட்டுக் கேட்டு, சினிமா எடுப்பது எப்படி என்றும் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். இயக்குநர், ஒளிப்பதிவாளர் என எல்லோரும் அன்பாகப் பார்த்துக்கொண்டனர். இந்த மாதிரி ஒரு குழு எப்போதாவதுதான் அமையும்,” என்கிறார் ஆனந்தி.
கொரோனா ஏற்படுத்திய இடைவெளியால் ஒவ்வொரு படத்தையும் நிதானமாக முடிக்க வேண்டிஇருப்பதாகக் குறிப்பிடுபவர், இது இணையத் தொடர்களுக்கான காலகட்டம் என்கிறார்.
“பலர் அதை விரும்புகிறார்கள். கொரோனா காலத்தில் முப்பது இணையத் தொடர்களைப் பார்த்தேன்.
“நானும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற தொடரில் நடித்தேன். நல்ல கதையம்சம் உள்ள தொடர் என்றால் நிச்சயம் நடிப்பேன்,” என்கிறார் ஆனந்தி.