தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ என்று அடுத்தடுத்து இரண்டு புதுப்படங்களை இயக்கப் போவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்துஇருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது இளைய சகோதரர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார் செல்வா. இதற்கிடையே ‘சாணிக் காயிதம்’ என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷுடன் நடித்து முடித்துள்ளார்.
தனுஷிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அவரது வளர்ச்சியும் தம்மை ஆச்சரியப்படுத்துவதாக சொல்லும் செல்வா, தம்பி தொட்டுள்ள உயரம் மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும் சொல்கிறார்.
“நானும் தனுஷும் பணியாற்றிய ‘துள்ளுவதோ இளமை’ படமாக்கப்பட்டபோது அவர் 16 வயது இளைஞன். இப்போது என்னுடன் பணியாற்றும் தனுஷ் மாபெரும் நடிகன். அண்ணனாக இந்த வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது எனில், இயக்குநராக பெரும் சவாலாக உள்ளது.
“அண்மையில்தான் புதுப்படத்துக்கான முன்னோட்டக் காட்சிகளைப் படமாக்கினோம். அப்போது தனுஷின் நடிப்பு என்னையும் அறியாமல் அவரைப் பார்த்து ‘நீ நடிகன்டா’ என்று சொல்ல வைத்தது,” என்கிறார் செல்வராகவன்.
‘எனது நடிப்பு எப்போதுதான் உங்களைத் திருப்திபடுத்துமோ தெரியவில்லை’ என்று தனுஷ் பலமுறை இவரிடம் கூறியிருக்கிறாராம். ஆனால், இப்போது எந்தவித தயக்கமுமின்றி தன் தம்பியை மிகச் சிறந்த நடிகன் என்று சொல்ல முடிகிறதாம்.
“ஓர் இயக்குநராக இவ்வளவு பெரிய நடிகரை எப்படி இயக்கப் போகிறோம் என்ற சவாலை எதிர்கொண்டிருக்கிறேன். இந்த எண்ணத்துடன்தான் பணியாற்றி வருகிறேன்,” என்று சொல்லும் செல்வா புதுப்படம் குறித்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி உள்ளார்.
இவரும் தனுஷும் இணைவது ‘புதுக்கோட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம். இது புதுக்கதையுடன் உருவாகும் புதுப்படம் என்கிறார். ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் எதிர்காலத்தில் வெளியாகும் என்றும் கொக்கி குமார் ரசிகர்களை மீண்டும் சந்திப்பது உறுதி என்றும் கூறுகிறார். ‘நானே வருவேன்’ படத்தில் ஒரு ஜீப் வாகனம் முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெறுமாம்.
“எல்லா நடிகர்களுக்கும் ஓர் அடைமொழி இருக்கிறது. எனது புதுப்படத்தின் மூலமாக தனுஷுக்கும் ஓர் அடைமொழி கொடுக்க விரும்புகிறேன். இந்த எண்ணம் நீண்ட நாட்களாக என் மனதில் உள்ளது.
“எனது படங்களில் நடித்தபோது தன் பெயரைக்கூட திரையில் காண்பிக்கத் தயங்குவதாக தனுஷ் என்னிடம் வருத்தப்படுவார். ‘தனுஷ் நடிக்கும் படம்’ என்று போடச் சொல்வார். நானோ, ‘அதான் படத்தில் நடிக்கிறாயே, பிறகு எதற்கு தனுஷ் நடிக்கும் என்று திரையில் காட்ட வேண்டும்’ என்று கூறிவிடுவேன். இப்போது நானே அவருக்கு ஓர் அடைமொழி கொடுக்க விரும்புகிறேன்.
“இது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்ல அவரையே ஆச்சரியப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஒருவேளை எந்த அடைமொழியும் வேண்டாம் என்று அவரே கூறிவிட்டால் அவர் முன்பு ஆசைப்பட்டது போல் ‘தனுஷ் நடிக்கும்’ என்று போட்டுவிடுவேன்,” என்கிறார் செல்வா.
‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து?
“கேமராவுக்குப் பின்னால் நின்று படத்தை இயக்குவது கடினம் என்றால், கேமராவுக்கு முன்பு நின்று நடிப்பது மிக மிகக் கடினம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
“தனுஷ் இப்போது ஹாலிவுட்டுக்கும் சென்றுவிட்டார். முதல் படத்தில் பணியாற்றியபோது எனக்கு 22 வயது, இப்போது 44 வயது. தனுஷ் எங்களையும் ஹாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். நான் இயக்கும் ஹாலிவுட் படத்திலும் அவர்தான் நாயகனாக இருப்பார்,” என்கிறார் செல்வராகவன்.