மலர்ந்துள்ள புத்தாண்டில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக வெளியாகி உள்ளது ‘மாஸ்டர்’.
எனினும் எதிர்வரும் நாள்களில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை திரையுலகத்தினர் உணர்ந்துள்ளனர். அதேவேளையில் பல சுவாரசியங்களும் அரங்கேற உள்ளன.
2019ஆம் ஆண்டு இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியீடு கண்ட நிலையில் கடந்த ஆண்டு கோடம்பாக்கத்தில் உத்தேசமாக நூறு படங்களே வெளியீடு கண்டன. இவற்றுள் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்ட படங்களும் அடங்கும்.
திரையரங்குகள், ‘ஓடிடி’ இடையே போட்டி
நடப்பாண்டில் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திரையரங்குகளுக்கும் ‘ஓடிடி’ எனப்படும் இணையத்தில் படங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக ஒருதரப்பினர் கருதுகின்றனர்.
‘ஓடிடி’யால் திரையரங்குகளின் வருமானம் பாதிக்கப்படும் என்பது ஒருதரப்பின் கருத்தாக உள்ளது.
ஆனால் ‘வார்னர் பிரதர்ஸ்’ போன்ற பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் தயாரிப்புகளை ஒரே நாளில் திரையரங்குகளிலும் இணையத்திலும் வெளியிடுவதாக மற்றொரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
எனவே இரு தளங்களிலும் வசூல் காண்பதே புத்திசாலித்தனம் என இத்தரப்பு கூறுகிறது. ரசிகர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியவரும்.
முன்னணி நாயகர்களின் படங்கள்வசூல் தருமா?
பெரிய, முன்னணி நாயகர்களின் படங்கள் இந்தாண்டு வெளியீடு காண உள்ளன.
ரஜினியின் ‘அண்ணாத்த’, அஜித்தின் ‘வலிமை’, விக்ரமின் ‘கோப்ரா’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ‘டாக்டர்’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, சிம்புவின் ‘மாநாடு’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காணும். இவற்றின் வசூலும் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கோடம்பாக்கம் மீண்டும் நிமிர்ந்துவிடும் என்கிறார்கள் திரை ஆர்வலர்கள்.
அதிகரிக்கும் ‘ஆந்தாலஜி’ படங்கள்
இதற்கிடையே தமிழிலும் ஒரே படத்தில் பல கதைகளைச் சொல்லி அவற்றை இறுதியில் இணைக்கும் ‘ஆந்தாலஜி’ வகைப் படங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’ ஆகிய படங்கள் வெளியாகின.
மணிரத்னம், கவுதம் மேனன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், கார்த்திக் நரேன், கே.பி.ஆனந்த் உள்ளிட்ட பல இயக்குநர்கள் இணையத்தில் நேரடியாக வெளியிடுவதற்கென படைப்புகளை உருவாக்கத் தயாராகின்றனர்.
விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, கவுதம் கார்த்திக், கீர்த்தி சுரேஷ், தமன்னா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா, காஜல் உள்ளிட்ட பலர் இப்படங்களில் நடிக்கின்றனர்.
இதேபோல் இணையத் தொடர்களின் பக்கமும் கோடம்பாக்கத்து கலைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. பெரும்பாலான முன்னணி நடிகைகள் ஏதேனும் ஓர் இணையத் தொடரில் நடிக்கின்றனர் அல்லது ஒப்பந்தமாகி உள்ளனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அசத்தும் சேதுபதி, பிரியா
முன்னணி நாயகர்களில் வழக்கம் போல் இந்த ஆண்டும் விஜய் சேதுபதிதான் வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ், இந்தியில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இந்தியில் இரு இணையத் தொடர்களில் நடிக்கவும் இவர் ஒப்பந்தமாகி உள்ளார். ‘மனிதருக்கு எப்படித்தான் எல்லாவற்றுக்கும் நேரம் இருக்கிறதோ’ என்று கோடம்பாக்கத்துப் புள்ளிகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
நாயகிகளைப் பொறுத்தவரை பிரியா பவானி சங்கர் இன்னொரு நயன்தாராவாக உருவெடுத்து வருகிறார். தற்போது தமிழில் மட்டும் எட்டு படங்களிலும் தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரையும் இணையத் தொடர்களில் பிரபல இயக்குநர்கள் இருவர் ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
நகைச்சுவைக்குப் பஞ்சம் ஏற்படுமா?
கொரோனா காலத்தில் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் திரைப்படங்களைப் பார்ப்பவரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் நகைச்சுவைப் படைப்புகளை விரும்பிப் பார்க்கிறார்கள்.
இந்த ஆண்டு முன்னணி நகைச்சுவை நடிகர்களான சூரியும் யோகி பாபுவும் கதாநாயகர்களாக மாறியுள்ளனர். ஏற்கெனவே சந்தானமும் வடிவேலுவும் நகைச்சுவைக் களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டதால் இவர்களின் இடத்தை மற்றவர்கள்தான் நிரப்ப வேண்டியுள்ளது.
இளம் இயக்குநர்களின் படைப்புகள்
இந்த ஆண்டு பல இளம் இயக்குநர்களின் புதிய படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது. இவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ள நிலையில், அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். ‘கோலமாவு கோகிலா’ புகழ் நெல்சன் அடுத்து விஜய்யை இயக்க தயாராகிறார். விக்ரமை வைத்து ‘கோப்ரா’ படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார் விக்ரம். வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘வலிமை’ அடுத்த சில மாதங்களில் வெளியாகும்.