சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கபடதாரி’ பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இவர் ‘சைத்தான்’, ‘சத்யா’, படங்களின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தவர்.
“திகில் கதையைக் கொண்டு ரசிகர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்துவது அவ்வளவு சுபலபமல்ல. இதை உணர்ந்திருப்பதால் கதையில் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கிறோம்.
“கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தைத் தழுவி ‘கபடதாரி’ உருவாகி உள்ளது. மூலக்கதையே பிரமாதமாக இருக்கும். மேற்கொண்டு பல விவரங்களைச் சேகரித்து மெருகேற்றி உள்ளோம்.
“பொதுவாக இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவில் பயமுறுத்தி, பின்னணி இசையில் திடுக்கிட வைப்பதுதான் திரையுலக பாணி. இந்தப் படத்தில் யார் கபடதாரி எனும் உண்மையும் சேர்த்து கதை சொல்லப்படுவதால் பரபரப்பாக இருக்கும்,” என்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குற்றம் தொடர்பில் உண்மையைத் தேடிச் செல்லும் பயணம்தான் ‘கபடதாரி’யாம். அந்த உண்மைக் குற்றவாளி இப்போது எப்படி இருப்பான், என்ன மாதிரியான தேடுதல் நடக்கிறது, நீள்கிறது என்று காட்சிக்கு காட்சி திடீர் திருப்பங்களும் திடுக்கிடல்களும் இருக்குமாம். இந்தப் படத்துக்காக சிபிராஜ் கொடுத்துள்ள உழைப்பும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைப்பதாக பிரதீப் பாராட்டுகிறார்.
“படத்தின் தரத்தில் கொஞ்சம்கூட குறை வைக்கக்கூடாது என்பது என் ஆசை. அதற்காக சிபிராஜ் கொடுத்த ஒத்துழைப்பு குறித்து மிகப்பெரியது. அவரது நடிப்பு முன்னேறி இருப்பதை அண்மைய படங்கள் தெளிவாகக் காட்டு கின்றன. இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்தி உள்ள உடல்மொழியை அவரது மற்ற படங்களில் பார்த்திருக்க மாட்டீர்கள்.
“ஏற்கெனவே அவரை இயக்கியிருப்பதால் இம்முறை இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம்போல் வேகம் காட்டி இருக்கிறார்,” என்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
படத்தின் நாயகி நந்திதா ஸ்வேதாவுக்கு முக்கியமான கதாபாத்திரமாம். கதைப்படி அவருக்கும் சிபிக்கும் இடையே காதல் காட்சிகள் என்று எதுவும் இல்லையாம்.
“பரபரப்பான திகில் கதையில் காதல், ஊடல்களுக்கெல்லாம் அவசியமின்றி போய்விட்டது. கதைக்குத் தேவையான போக்கிலேயே காட்சிகளையும் அமைத்துள்ளோம். ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் பதிகிற இடங்களாக வந்து போவார்கள்.
“அப்படித்தான் நந்திதாவும் இந்தக் கதையில் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். எனினும் அவரது நடிப்பும் ஈடுபாடும் ஒட்டுமொத்த படக்குழுவால் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த பலர் புதுமுகங்கள். நிறைய பேர் அப்படித் தேவைப்பட்டனர். நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. போன்ற அனுபவ நடிகர்களுடன் புதுமுகங்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்துள்ளனர்.
“அதேபோல் ஒளிப்பதிவும் பாடல்களும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றும் அம்சங்களாக இருக்கும்,” என்கிறார் பிரதீப்.