ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தொடர்ந்து திரைப்படங்களிலாவது நடிக்கவேண்டும் என்பதே தீவிர ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட எழுபது விழுக்காடு படப்பிடிப்பை முடித்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் படப் பணிகள் நின்று போயின.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி. இந்நிலையில் அரசியல் பிரவே சத்தைக் கைவிட்டதால் வெகு விரைவில் படப்பிடிப்பை துவங்கலாம் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் அதற்கான வேலை களைத் தயாரிப்புத் தரப்பான ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 4ஆம் தேதி ‘அண்ணாத்த’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படமும் எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு இப்படத்தில் தீவிர கவனம் செலுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் வழக்கமான அதிரடி வசனங்கள் இடம்பெறாது என்று வெளியான தகவல் உண்மை அல்ல என்று கூறப்படுகிறது.
அரசியல் பிரவேசம் இல்லாவிட்டாலும் சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி கருத்து சொல்வது தமது கடமை என்று அவர் நினைப்பதாகவும் அதற்கேற்ற சில வசனங்களை சேர்க்குமாறும் இயக்குநர் சிவாவிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது. அந்த வசனங்கள் யாரையும் தாக்காத வகையில் பொதுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.