விக்ரம் மகன் துருவ்வும் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி உள்ளார். இம்முறை மாரி செல்வராஜ் இயக்கம், பா. ரஞ்சித் தயாரிப்பு என பலமான கூட்டணியுடன் அவர் களமிறங்குகிறார்.
இதில் அவருக்கு கபடி வீரர் வேடமாம். தனது கதாபாத்திரத்துக்காக இப்போதே கபடி பயிற்சியைத் தொடங்கி உள்ளார்.
“இது ஒரு விளையாட்டு வீரனின் கதையை மையப்படுத்தி உருவாகும் படம். சிறு வயது முதல் சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரன் எத்தகைய சோதனைகளையும் வேதனைகளையும் மனதில் சுமந்து இறுதியில் தாய்நாட்டுக்காக சாதித்துக் காட்டுகிறான் என்பதை விரிவாக அலசும் வகையில் காட்சிப்படுத்த உள்ளோம்,” என்கிறார் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் இதுவரை இப்படிப்பட்ட விளையாட்டு சார்ந்த படைப்பு வெளிவந்ததில்லை என்று சொல்லும் வகையில் இந்தப் படம் இருக்குமாம். ஏதோ ஒரு சிறிய ஊரில் பிறக்கும் கதாநாயகன் தனது திறமையால் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்து அதைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் நாட்டுக்காக தங்கப் பதக்கம் பெறுவதுதான் படத்தின் கதை.
விளையாட்டு வீரர் கதாபாத்திரம் என்பதால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும் என்று துருவ்விடம் தொடக்கத்திலேயே கூறிவிட்டாராம் மாரி. மேலும் இப்போதே கபடி பயிற்சியைத் தொடங்கிவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக உற்சாகத்துடன் தயாராகி வருவதாக துருவ் தரப்பும் தெரிவித்துள்ளது.
“நம் இலக்கை அடைவதற்கான முயற்சியில் கலை மீதான அர்ப்பணிப்புதான் மிக முக்கியம் என்று என் தந்தை சொல்லியிருக்கிறார். இந்த அர்ப்பணிப்பு உடைய இருவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருகிறது,” என்று துருவ் விக்ரம் தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதுடன் தனது நீலம் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் அவர் வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அவற்றுள் இரண்டு படங்களுக்கான பணிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், தனது முன்னாள் உதவி இயக்குநரான மாரி செல்வராஜை வைத்து துருவ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ரஞ்சித். இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து துருவ் விக்ரமுக்கு ஏற்ப இளமைத் துள்ளலும் சமுதாயத்துக்கு ஏற்ற கருத்துகளுடனும் கூடிய கதையை அவர் அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே துருவ்வையும் கவுதம் கார்த்திக்கையும் வைத்து படம் எடுக்க பிரபல இயக்குநர் ஒருவர் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த இரு வாரிசு நடிகர்களையும் ‘அக்னி நட்சத்திரம்’ பாணியில் உள்ள கதையில் நடிக்கவைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
இதுகுறித்து இருதரப்பினரிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் ஒரு தகவல் உலா வருகிறது.
துருவ் இப்போதைக்கு தனி நாயகனாக நடிப்பதில் மட்டுமே விருப்பம் கொண்டுள்ளாராம்.
ஆனால் கவுதம் கார்த்திக் இரு நாயகர்கள் உள்ள படத்தில் நடிப்பதில் தமக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளார்.
இரண்டு வெற்றிப் படங்களிலாவது நடித்த பிறகுதான் இது குறித்து துருவ் முடிவெடுப்பார் எனத் தகவல்.