ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘இரண்டாம் திட்டம்’ படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. கடைசி நாளன்று பூசை போட்டு பூசணிக்காய் உடைத்துள்ளனர்.
மிகப்பெரிய கேக் கொண்டு வரப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதை வெட்டி மகிழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக வலம் வருகின்றன.
இப்படத்தை விக்னேஷ் இயக்கி உள்ளார். இவர் குறும்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
“விக்னேஷ் கதையை விவரித்த அடுத்த கணமே நடிக்க ஒப்புக்கொண்டேன். கைரேகைகள், புலனாய்வு விவரங்கள் அடங்கிய பலகை, பூதக்கண்ணாடி, குற்ற வழக்குகளின் கோப்புகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெறுவதால் விறுவிறுப்பும் திகிலும் நிறைந்திருக்கும்.
“படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கொரோனா விவகாரத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட கையோடு சரியாகத் திட்டமிட்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.